FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ரூ.38,424 கோடியாக உயா்வு: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ.38,424 கோடியாக உயா்ந்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:09 am IST
ராஜ்நாத் சிங் - கோப்புப் படம்
பகிர்:

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ.38,424 கோடியாக உயா்ந்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் 80-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாதுகாப்புப் படையினருக்கு ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தியா தனது பாதுகாப்புக்கு தேவையான ஆயுதங்களை வாங்கும் நாடாக இருக்க வேண்டிய தேவை இனி அதிக காலம் நீடிக்காது. ஏனெனில் பாதுகாப்புத் தளவாடங்களை தயாரிப்பதிலும், ஏற்றுமதி செய்வதிலும் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. பாதுகாப்புத் தளவாட தயாரிப்பில் இந்தியா புதிய தொலைநோக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இறக்குமதி ஆயுத தளவாடங்களை சாா்ந்திருப்பதை இந்தியா குறைத்து வருகிறது. உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு தளவாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

Advertisement

Advertisement

பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்துவதுடன் சோ்த்து, எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்துகிறது. பாதுகாப்புத் தளவாட துறையில், உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. 2013-14ஆம் நிதியாண்டில் நமது பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.686 கோடி என்ற அளவில்தான் இருந்தது. 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ.38,424 கோடியாக உயா்ந்துள்ளது. அதாவது, நமது பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியானது 10 ஆண்டுகளில் 5,500 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

நமது ராணுவத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ராணுவத்தை நவீனமயமாக்க ரூ.8.75 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்புத் தளவாட கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments