சற்று வலி குறைவான.. தூக்கு தண்டனை முறையை நிறுத்தக் கோரிய மனு தள்ளுபடி!
சற்று வலி குறைவான மரண தண்டனை முறையை பரிசீலிக்கக் கோரிய மனு தள்ளுபடி
நாட்டில், மரண தண்டனையை நிறைவேற்றும் தூக்கு தண்டனை முறைக்கு மாற்றாக, வலி குறைந்த விஷ ஊசி செலுத்துவது போன்ற மாற்று வழிகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நாட்டில், தூக்கிலிடுவதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதன் அரசியலமைப்புச் சட்டம் செல்லுபடியாகும் என்பதை உறுதிசெய்ததோடு, தற்போதைக்கு நாட்டில் தூக்கிலிடப்படும் முறையே தொடரும் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மரியாதையை காக்கும் வகையில், தூக்கு தண்டனைக்கு மாற்றாக, சற்று வலி குறைந்த தண்டனை முறைகளைப் பின்பற்ற வலியுறுத்திய மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
Advertisement
Advertisement
ஆனாலும், இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தற்போது அளித்திருப்பது இறுதி தீர்ப்பு அல்ல, எதிர்காலத்தில் அறிவியல், மருத்துவ, அனுபவரீதியான ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, தூக்கு தண்டனைக்கு மாற்றாக வேறு தண்டனை முறைகள் உருவாக்கப்படுவதை, தற்போதைய ரிட் மனு தள்ளுபடி முடிவு ஒருபோதும் தடுப்பதாக இருக்காது, மத்திய அரசு, மாற்று வழிகளை நிபுணர் குழுவின் மூலம் ஆராயலாம் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
மேலும், இந்த மனுவை மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதற்கான அவசியம் இல்லை என்றும் கூறிவிட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய மூன்று தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, அவற்றை ஒரு பெரிய அமர்வுக்குப் பரிந்துரைக்குமாறு மனுதாரர் கோரியிருந்த நிலையில், அவ்வாறு செய்வதற்குப் போதுமான அடிப்படை தகுதி இல்லை என்றுகூறி அந்த அமர்வு மனுவை நிராகரித்துள்ளது.
வழக்குரைஞர் ரிஷி மல்ஹோத்ரா தாக்கல் செய்த மனுவில், மரண தண்டனையை நிறைவேற்ற தூக்கு தண்டனை முறைக்கு மாற்றாக, சில நிமிடங்களில் உயிரை எடுக்கும் அல்லது சற்று வலி குறைந்த விஷ ஊசி, துப்பாக்கியால் சுட்டு, மின்சாரத்தை செலுத்தி, விஷ வாயு அறைக்குள் அடைப்பது போன்ற முறைகளில் எது எளிதானதோ அதனைப் பின்பற்ற பரிந்துரைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
தூக்கிலிடுவது என்பது மிகவும் வலி நிறைந்தது, கொடூரமானது, ஒருவர் தூக்கிலிடப்பட்டு மரணத்தை உறுதிசெய்ய 40 நிமிடங்கள் ஆகும், ஆனால், விஷ ஊசி போன்ற மற்ற முறைகளில் வெறும் ஐந்து நிமிடங்களில் மரணம் நிகழும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.