FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

18-ஆவது மக்களவையில் கூட்டுக் குழு ஆய்வுக்கு 9 மசோதாக்கள் பரிந்துரை

18-ஆவது மக்களவையில் கூட்டுக் குழு ஆய்வுக்கு 9 மசோதாக்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:48 am IST
மக்களவை
பகிர்:

நமது சிறப்பு நிருபர்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 2014-ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரையிலான கால கட்டத்தில் 17 மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 2024-இல் அமைந்த 18-ஆவது மக்களவை காலத்தில் மட்டும் இதுவரை 9 மசோதாக்கள் கூட்டுக் குழுக்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கு முன்பிருந்த 16 மற்றும் 17-ஆவது மக்களவை காலங்களில் தலா 4 மசோதாக்கள் மட்டுமே கூட்டுக் குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவை தொடர்பாக மொத்தம் 14 ஆய்வுக் குழு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

ஒருமித்த நோக்கங்களைக் கொண்ட சில மசோதாக்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படுவதால் மசோதாக்களின் எண்ணிக்கை இம்முறை அதிகமாக உள்ளதாகத் தோற்றம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கான மசோதாவுடன், சட்டப்பேரவைகளைக் கொண்ட தில்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான துணை மசோதாவும் இணைத்து அனுப்பப்பட்டது.

முக்கிய மசோதாக்கள்: 18-ஆவது மக்களவையில் கூட்டுக் குழுக்களுக்கு அனுப்பப்பட்ட முக்கிய மசோதாக்களில், வக்ஃப் (திருத்த) மசோதா, "ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான 2 மசோதாக்கள், அமைச்சர்கள் கைது அல்லது காவலில் வைக்கப்படும்போது அவர்களைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பான 3 மசோதாக்கள், உயர் கல்வியை சீரமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட விக்சித் பாரத் சிக்ஷô அதிஷ்டான் மசோதா, பெரு நிறுவனங்கள் சட்டங்கள் திருத்த மசோதா, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை திருத்த மசோதா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

குழுக்களின் செயல்பாடு:

பிரதமர் மோடியின் முதல் இரண்டு ஆட்சிக் காலங்களிலும் தலா 4 மசோதாக்கள் வீதம் கூட்டுக் குழுக்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

மக்களவை செயலகம் மற்றும் "பிஆர்எஸ் இந்தியா' என்ற நாடாளுமன்ற ஆராய்ச்சி அமைப்பின் தரவுகளின்படி, இவற்றில் சில சட்டமாக இயற்றப்பட்டுள்ளன. சில மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன அல்லது காலாவதியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் குழுக்கள் அல்லது ஏதேனும் ஒரு அவையின் தேர்வுக் குழுக்கள் (செலக்ட் கமிட்டி) குறிப்பிட்ட ஒரு மசோதாவை விரிவாக ஆய்வு செய்வதற்காக அமைக்கப்படுகின்றன. அவை இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments