காதல் வயப்பட்ட ஆசிரியர்கள்... புகாரளிக்க 100 கி.மீ பயணித்த பள்ளி மாணவர்கள்!
ஆசிரியர்களின் காதலால் மனமுடைந்த மாணவர்கள் செய்த செயல் பற்றி..
மத்தியப் பிரதேசத்தில் காதல் வயப்பட்ட ஆசிரியர்கள் இருவர் குறித்துப் புகாரளிக்க 100 கி.மீ பயணம் மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள ஜுன்னார்தேவ் பகுதியில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. பள்ளியில் மாணவர்களுக்கு ஒழுக்கம், கல்வியைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இருவர் காதல் வயப்பட்டதால், மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஐந்தாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 50 முதல் 60 மாணவர்கள் அடங்கிய குழுவினர், பாதுகாவலர் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து கடந்த செவ்வாயன்று பேருந்துகள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்து மூலம் சிந்த்வாரா மாவட்டத் தலைமையகத்துக்குச் சென்றடைந்தனர்.
Advertisement
Advertisement
சிந்த்வாரா மாவட்டத் தலைமையகத்திற்குச் சென்று, பழங்குடியினர் நலத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்தனர். தங்கள் பள்ளியில் உள்ள இரண்டு ஆசிரியர்கள் காதல் வயப்பட்டதால் பல மாதங்களாகத் தங்கள் படிப்பு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் அதிகாரிகளிடம் புகாரளித்தனர்.
மாணவர்களின் புகாரைத் தொடர்ந்து, பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் இரண்டு ஆசிரியர்களையும் பணியிலிருந்து நீக்கியது. மேலும், எதிர்காலத்தில் அவர்கள் கற்பித்தல் பணிகளுக்குத் தகுதியற்றவர்கள் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது கூடுதல் நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரையும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இரண்டு தற்காலிக ஆசிரியர்களும் தகுதியற்றவர்கள் எனக் குறிப்பிட்டுப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்திலும் அவர்கள் கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிந்த்வாரா பழங்குடியினர் நலத்துறை உதவி ஆணையர் சத்யேந்திரா மார்க்கம் தெரிவித்தார்.
மாணவர்கள் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தை அணுகியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஆசிரியர்களிடையே கவனத்தைத் திருப்பியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.