பதவி விலக மாட்டேன்! - வழக்குரைஞர்கள் போராட்டத்துக்கு பார் கவுன்சில் தலைவர் பதில்!
நான் பதவி விலக மாட்டேன் என இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா பேச்சு...
நான் பதவி விலக மாட்டேன் என வழக்குரைஞர்கள் போராட்டம் குறித்து இந்திய பார் கவுன்சில் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மனன் குமார் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
சட்டத் துறை சார்ந்த பல்வேறு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று இந்திய பார் கவுன்சில் தலைவராக உள்ள மனன் குமார் மிஷ்ரா பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, தில்லியில் உள்ள பிசிஐ அலுவலகத்தின் முன்பாக பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள் நேற்று (ஆக. 20) போராட்டம் நடத்தினர்.
பிசிஐ தலைவராக மிஸ்ரா நீண்ட காலம் பதவியில் இருப்பது, வழக்குரைஞர்களுக்கான நலத் திட்டங்கள் இல்லாதது, வழக்குரைஞர் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படாதது, மாநில வழக்குரைஞர்களுக்கான பதிவு கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நான் பார் கவுன்சில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்; நான் பதவி விலக மாட்டேன் என மனன் குமார் மிஷ்ரா இன்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“நான் பார் கவுன்சில் தலைவராக 12 முதல் 14 ஆண்டுகள் பதவி வகித்துள்ளதற்கான காரணம் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மனன் மிஷ்ரா 25 லட்சம் வழக்குரைஞர்களின் பிரதிநிதி; அவர் பதவி விலக மாட்டார். நேற்று இரவு சுமார் 15 மாணவர்கள் நான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி இங்கு வந்தனர்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, சட்டப் படிப்பு மற்றும் ஆய்வுக்கான தேசிய அகாடமி பல்கலைக் கழக (நல்சார்) பட்டமளிப்பு விழாவுக்கான சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்தை அழைக்க நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்கு அந்தப் பலகலைக்கழகத்தின் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிபதி சூர்யகாந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களை பார் கவுன்சில்களில் பதிவு செய்யக் கூடாது எனக் கூறி பிசிஐ உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு, நாட்டின் பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Manan Kumar Mishra, Chairman of the Bar Council of India stated regarding the lawyers' protest that he will not resign.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.