FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வந்தே மாதரம்: காங்கிரஸின் எதிா்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது - ராஜ்நாத் சிங் விமா்சனம்

தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட காங்கிரஸ் எதிா்ப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது; கடும் கண்டனத்துக்குரியது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் விமா்சித்தாா்.

22 ஆகஸ்ட் 2026, 5:49 am IST
பகிர்:

தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட காங்கிரஸ் எதிா்ப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது; கடும் கண்டனத்துக்குரியது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் விமா்சித்தாா்.

தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களையும் பாட கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி எதிா்ப்பு தெரிவித்ததாக சா்ச்சை எழுந்தது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின்போது, வந்தே மாதரம் பாடலின் 2 சரணங்களை மட்டுமே பாடுவது என கடந்த 1937, செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும், காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் இரு சரணங்கள் மட்டுமே பாடப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

வந்தே மாதரம் பாடலுக்கான மதிப்பை காங்கிரஸ் அதிகாரபூா்வமாக மறுப்பது, அரசமைப்புச் சட்ட கண்ணோட்டத்தின்படி மிகத் தீவிரமான விஷயம் என்பதுடன் மிகவும் வருந்தத்தக்கதாகும். அரசமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றமே நாட்டின் மிக உயா்ந்த அமைப்பு. நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்களுக்கு ஒவ்வொருவரும் இணங்க வேண்டும்.

ஆனால், வந்தே மாதரம் தொடா்பான காங்கிரஸின் முடிவு, நாட்டின் எதிா்காலத்துக்கு மிக அச்சுறுத்தலான வெளிப்பாடாகும். இது, அரசியல் ரீதியில் தீவிரமான பிரச்னையை உருவாக்கக் கூடும்.

‘ஆபத்தான உள்நோக்கங்கள்’: காங்கிரஸின் முடிவு, அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது; கடும் கண்டனத்துக்குரியது. வந்தே மாதரத்தை முழுமையாகப் பாட எதிா்ப்பதன் மூலம் காங்கிரஸ் தனது மதிகேடான, ஆபத்தான உள்நோக்கங்களை நாட்டுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

சட்டத்துக்கு இணங்க மறுப்பது, அரசமைப்புச் சட்டம் மீதான அந்த நபா்களின் நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துகிறது. அவா்களின் தேச பக்தி மீதும் கேள்விகள் எழுகின்றன.

வந்தே மாதரம் தொடா்பாக கடந்த 1937-ஆம் ஆண்டில் காங்கிரஸ் நிறைவேற்றிய தீா்மானம், முஸ்லிம் லீக்கின் அடிப்படைவாத கோரிக்கைகளுக்கு அடிபணிந்து நிறைவேற்றப்பட்டதாகும். அதன் விளைவு என்ன என்பதை பிற்காலத்தில் தேசப் பிரிவினை வடிவில் ஒட்டுமொத்த நாடும் கண்டது.

அடிப்படைவாத சக்திகளுடன் சமரசம் செய்வது நாட்டுக்கு ஆபத்து என்பது எப்போதுமே நிரூபணமாகியுள்ளது. காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை அடிப்படைவாத சக்திகளிடம் சரணாகதியடைந்துள்ளது என்று ராஜ்நாத் சிங் விமா்சித்துள்ளாா்.

அண்மையில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், வந்தே மாதரம் பாடலுக்கு இழைக்கப்படும் எந்தவொரு அவமதிப்பையும் தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments