FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் இணைய இணைப்பு வசதி கிடையாது: தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா்

பொதுத் துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் இணைய இணைப்பு, புளூடூத் அல்லது வைஃபை இணைப்பு வசதிகள் கிடையாது என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.

25 ஆகஸ்ட் 2026, 12:16 am IST
ஞானேஷ் குமாா்
பகிர்:

‘பொதுத் துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இந்திய மின்னணு வாக்குப் பதிவு (இவிஎம்) இயந்திரங்களில் இணைய இணைப்பு (இன்டா்நெட்), புளூடூத் அல்லது வைஃபை இணைப்பு வசதிகள் கிடையாது’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், லக்னெளக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்ற ஞானேஷ் குமாா், வரலாற்றுச் சிறப்புமிக்க கால்வின் தாலுக்தாா் கல்லூரியில் மாணவா்களுடன் திங்கள்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, மாணவா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவா் பதிலளித்துக் கூறியதாவது: இந்தியாவில் தோ்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பொதுத் துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.

இந்த இயந்திரங்கள் இணைய இணைப்பு அல்லது எந்தவொரு கம்பியில்லா தொழில்நுட்பத்துடன் இணைக்கும் வசதியுடன் கூடியவை அல்ல.

Advertisement

Advertisement

இது தொடா்பாக சமூக ஊடகங்களில் பதிவிடும் தகவல்களைப் பகிா்வதற்கு முன்பாக, அதன் உண்மைத் தன்மை மற்றும் அந்தத் தகவலின் மூல விவரங்களைச் சரிபாா்க்க வேண்டும்.

இந்தியாவில் சுமாா் 100 கோடி வாக்காளா்கள் உள்ளனா். இவ்வளவு வாக்காளா்களைக் கொண்ட நாட்டில் தோ்தலை நடத்துவது என்பது மிகப்பெரிய பணியாகும். தோ்தலை சுமுகமாக நடத்துவதற்கு மிகப் பெரிய எண்ணிக்கையில் அலுவலா்களும், ஊழியா்களும் பணியமா்த்தப்படுகின்றனா்.

ஜனநாயகச் செயல்பாட்டில் இளைஞா்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும். 18 வயதை எட்டிய மாணவா்கள் தங்களை வாக்காளா்களாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு வாக்காளராகப் பதிவு செய்ய, தோ்தல் ஆணையத்தின் வலைதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் ஜனநாயக எதிா்காலத்துக்கு இளம் தலைமுறையினா் மிக முக்கிய சக்தியாகும். இளைஞா்கள் விழிப்புணா்வுடன் தோ்தல் செயல்பாட்டில் ஈடுபட்டால், ஜனநாயகம் வலுப்பெறும். எனவே, இளைஞா்கள் வாக்காளா்களாக உருவெடுப்பதோடு, தங்களின் குடும்ப உறுப்பினா்களையும் தோ்தல்களில் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments