ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: 3 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!
ரம்பன் மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு பற்றி..
ஜம்மு-காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிலச்சரிவு மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
சமீபத்திய கனமழையைத் தொடர்ந்து, செனாப் ஆற்றின் கரையில் உள்ள ராஜ்கர் தாலுகாவின் குல்தி சக்கா குந்தி பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு உள்ளூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
நிர்வாகம், வருவாய் மற்றும் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.
Advertisement
Advertisement
கடந்த சில நாள்களாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பகத் ராம் என்பவருக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதாகவும், சாட் ராம், சமன் லால் மற்றும் பூஷன் லால் ஆகியோரின் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும் ராஜ்கர் தாலுகா அதிகாரி மேஜர் சிங் தெரிவித்தார்.
மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை இடமாற்றம் செய்துள்ளனர்.
அவர்களுக்குத் தற்காலிகத் தங்குவதற்கு கூடாரங்கள் வழங்கப்பட்டன. நாயப் தாலுகா அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், அங்குள்ள சிலரின் வீடுகளில் விரிசல்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட்ட பாஜக ரம்பன் மாவட்டத் தலைவர் நீலம் குமார் லாங்கே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், நிலைமையை ஆய்வு செய்ய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைமையிலான அரசைச் சேர்ந்த அமைச்சர், எம்எல்ஏ அங்கு வராதது குறித்து கவலை தெரிவித்தார்.
நிலச்சரிவு மற்றும் விரிசல்களுக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தோடா மாவட்டத்தில் உள்ள புல் டோடா அருகே செனாப் ஆற்றின் அருகே மணல் எடுக்கும் படகுடன் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரும் மாநில பேரிடர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட நபர், அப்பகுதியில் மணல் எடுப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருந்த தனியார் நிறுவனம் ஒன்றில் மணல் எடுக்கும் இயந்திரத்தை இயக்கும் பணியாளராகப் பணியாற்றி வந்தவர், வெளியூரைச் சேர்ந்தவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆற்றிலிருந்து அடித்துச் செல்லப்பட்ட இயந்திரத்தை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.