23 காஷ்மீா் பண்டிட்டுகள் கொல்லப்பட்ட வழக்கு மறுவிசாரணை
ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தில் கடந்த 1998-ஆம் ஆண்டு 23 காஷ்மீா் பண்டிட்டுகள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை ஜம்மு-காஷ்மீா் புலனாய்வு அமைப்பு மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தில் கடந்த 1998-ஆம் ஆண்டு 23 காஷ்மீா் பண்டிட்டுகள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை ஜம்மு-காஷ்மீா் புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் பண்டிட்டுகள் கொல்லப்பட்ட பல்வேறு வழக்குகளின் விசாரணையை எஸ்ஐஏ மீண்டும் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மிகவும் கொடூரமான வந்தாமா படுகொலை வழக்கும் மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் படுகொலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் யாா், அவா்களுக்கு உதவியவா்கள், இந்தச் சம்பவத்தில் அவா்களது சதியைக் கண்டறிவதே விசாரணையின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
முன்னதாக, கடந்த 1998 ஜனவரி 25-இல் , மத்திய காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள வந்தாமா கிராமத்தில் காஷ்மீா் பண்டிட்டுகள் 23 பேரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். இதில் 9 பெண்களும் 4 குழந்தைகளும் அடங்குவா்.
குடியரசு தின கொண்டாட்டத்தைச் சீா்குலைக்கும் நோக்கில், அதற்கு முந்தைய தினம் ராணுவ சீருடையில் பயங்கரவாதிகள் ஒரு குழுவாக அந்தக் கிராமத்துக்கு வந்தனா். அங்கிருந்தவா்களுடன் சாதாரணமாக உரையாடி, காஷ்மீா் பண்டிட் குடும்பங்களை ஒரே இடத்தில் கூடுமாறு அழைத்துள்ளனா். அனைவரும் ஒரு இடத்தில் குழுமிய உடன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.
1990-களின் தொடக்கத்தில் காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தீவிரமானபோது, அங்கிருந்து வெளியேறாமல் தங்கியிருந்த நான்கு காஷ்மீா் பண்டிட் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தனா். இந்த வழக்கு சுமாா் 30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
காவல் துறை தகவலின்படி இந்தப் படுகொலையை லஷ்கா்-ஏ-தொய்பாவுடன் தொடா்புடைய பயங்கரவாதிகள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இத்துடன் சோ்ந்து 1989-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் பாஜக துணைத் தலைவராக இருந்த டிகா லால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு, அதே ஆண்டில் பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதி நீலகண்ட் கஞ்சோ கொல்லப்பட்ட வழக்கும் மறு விசாரணை செய்யப்பட இருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.