மனைவியை வீட்டு வேலை செய்ய கணவன் கட்டளையிடக் கூடாது: உயர்நீதிமன்றம்
வீட்டு வேலைகளை ஆண்களும் பெண்களும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வீட்டு வேலைகளை ஆண்களும் பெண்களும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் பணிபுரியும் நபர் ஒருவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், திருமணமான முதல் 6 மாதங்கள் தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகவும், அதன் பின்னர் தன் பெற்றோரிடம் மனைவி நடந்துகொள்ளும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டதாகவும் கணவர் தெரிவித்திருந்தார்.
மேலும், மனைவி தனது பெற்றோரைக் கவனிக்காமலும், வீட்டு வேலைகளைச் செய்யாமலும் இருந்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். அதுமட்டுமின்றி, தனது அனுமதியின்றி மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
அவரது மனைவி மகளுடன் வசித்து வரும் நிலையில் அவருக்கு மாதம் ரூ.9,000 ஜீவனாம்சமாக வழங்கவேண்டும் என 2025 நவம்பரில் குடும்ப நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சில்லகூர் சுமலதா, ”கணவர் ஒரு முதலாளியைப் போன்றும், மனைவி வீட்டு வேலை செய்வதற்கும் பெற்றோரைக் கவனிப்பதற்கும் நியமிக்கப்பட்ட ஒரு வேலையாளைப் போன்றும் நடத்தப்பட்டதாக இந்த மனுவில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.
கணவர் மற்றும் அவரது பெற்றோரின் அனுமதியின்றி தான் பிறந்த வீட்டிற்கு மனைவி சென்றதாகக் கூறுவது, மனைவியின் விருப்பங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கணவரின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது
வீட்டு வேலைகளை ஆண்களும் பெண்களும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்ய மனைவிக்கு கணவன் கட்டளையிடக் கூடாது. மாமனார் - மாமியாரைக் கவனித்துக் கொள்வது அவரவர் விருப்பத்தின் பேரில் செய்யக்கூடிய செயலே. வற்புறுத்தி செய்யக்கூடியது அல்ல.
ஒரு இந்தியப் பெண், தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்லும் அடிப்படை விருப்பத்தை நிறைவேற்றக்கூட கணவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் ஏன் அனுமதி பெற வேண்டும்.
திருமணம் என்பது சமத்துவம் இல்லாத இருவருக்கிடையிலான உறவு அல்ல. பாலின அடிப்படையில் ஒரு பெண்ணின் சுதந்திரத்தைப் பறிக்க முயலும் எந்த முயற்சியும் சமத்துவத்திற்கு எதிரானது. அது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது” என்று அவர் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.
அதேபோல, ஜீவனாம்ச தொகையாக மனைவிக்கு மாதம் ரூ. 5,000 மற்றும் மகளுக்கு ரூ. 4,000 என மொத்தம் ரூ. 9,000 வழங்க குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டதை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
Husband should not order wife to do household chores: High Court
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.