மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானியின் எதிர்ப்பு பற்றி...
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு அந்த நகரத்தின் மேயரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஸோரான் மம்தானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரிலுள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஹிந்து அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்வு ஒன்றில், வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு சுமார் 5,000 பேருடன் உரையாற்றவுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், நியூயார்க் மேயர் மம்தானியிடம், ஆர்எஸ்எஸ் நிகழ்வு குறித்தும், அதனை தடை செய்வீர்களா? என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
Advertisement
Advertisement
இந்த கேள்விகளுக்கு பதிலளித்து மம்தானி பேசியதாவது:
”ஆர்எஸ்எஸ் நிகழ்வை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், ஒரு தனியார் நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கு நகர நிர்வாகத்திற்கு ஏதேனும் அதிகாரம் உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.
நியூயார்க் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க மேயராக நான் பொறுப்பு வகிக்கிறேன். என் தாயாரின் குடும்பத்தினர் அனைவரும் இன்னும் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். பன்முகத்தன்மை கொண்ட சமூகம், மதச்சார்பற்ற குடியரசு என்பதுதான் எனது குடும்பத்தினர் எனக்கு கற்பித்தது. நான் வளர்ந்தபோது அறிந்த இந்தியாவின் பிம்பமும் அதுதான்.
வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில், எந்தவொரு நாட்டையும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானதாக மட்டும் கருதி மற்றவர்களை விலக்கி வைக்கும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் வளரும் ஒரு இயக்கத்தை பார்ப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
எனவே, ஒரு இந்திய - அமெரிக்கராக மட்டுமல்லாமல், நிறம், கொள்கை, மதம், நம்பிக்கை அல்லது பூர்வீகம் என எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதரையும் உள்ளடக்கியதாக இருக்கும் ஒரு நகரத்தின் மேயராகவும், நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆழமாக எதிர்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
NYC Mayor Mamdani opposes Mohan Bhagwat's New York event!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.