200 கி.மீ. பாய்ந்து இந்தியாவுக்குள் வந்த இமாலய வெள்ளக் கழிவு! 7 உடல்கள் மீட்பு
200 கி.மீ. பாய்ந்து இந்தியாவுக்குள் இமாலய வெள்ளக் கழிவு கண்டகி ஆற்றில் கலந்துள்ளன. இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இமாலய வெள்ளப் பெருக்கு சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து இந்தியாவுக்குள் கழிவுகளையும், மனித உடல்களையும் சுமந்து வந்திருக்கிறது.
புதன்கிழமை காலை நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் போடே கோஷி ஆற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கு, நேபாளத்தில் கடும் சேதங்களை ஏற்படுத்திவிட்டு, ஆற்றின் கரையோரத்தில் கண்டதையெல்லாம் வாரிச் சுருட்டிக்கொண்டு இந்தியாவுக்குள் பாயும் கண்டகி ஆறில் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து கலந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் மனித உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கண்டகி ஆற்றிலிருந்து நான்கு பேரின் உடல்கள் மடகாராஜ்கஞ்ச் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. இவை, நேபாள வெள்ளத்தில் சிக்கியவர்களின் உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்நாட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஷிநகர் பகுதியிலிருந்து 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
நேபாள வெள்ளத்தில் சிக்கி இதுவரை 472 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதுவரை நேபாளத்தில் 469 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 1400 பேரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மீட்கப்பட்ட 7 பேரின் புகைப்படங்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் எல்லைக்கு அருகே திபெத்தின் லெண்டே ஆற்றில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி ஆற்றின் வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் புகுந்து பேரழிவை விளைவித்தது.
மலைப் பகுதியில் இருந்து சகதி, பாறைகளுடன் இரு கரைகளையும் வாரிசுசுருட்டிக்கொண்டு பல அடி உயரத்துக்கு சீறிப்பாய்ந்த வெள்ளத்தில், ஏராளமான வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், 10-க்கும் மேற்பட்ட நீா்மின் நிலையங்கள், பிற உள்கட்டமைப்புகள் கூண்டோடு அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தின் கோர தாண்டவத்தில் பல கிராமங்கள் உருக்குலைந்தன. ஏராளமானோர் பலியாகினர்.
Himalayan floods surges 200 km into India; 7 bodies recovered
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.