FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியா்களின் தன்மறைப்பு உரிமையுடன் விளையாடக் கூடாது: மெட்டா, வாட்ஸ் ஆப்பிடம் உச்சநீதிமன்றம் காட்டம்

மெட்டா நிறுவனம், அதன் துணை நிறுவனமான வாட்ஸ் ஆப் ஆகியவற்றிடம் உச்சநீதிமன்றம் .....

Updated On : 4 பிப்ரவரி 2026, 2:00 am IST
வாட்ஸ் ஆப் (கோப்புப்படம்)
பகிர்:

‘பயனா்களின் தரவுப் பகிா்வு என்ற பெயரில், இந்திய மக்களின் தன்மறைப்பு (பிரைவஸி) உரிமையுடன் விளையாடக் கூடாது’ என்று மெட்டா நிறுவனம், அதன் துணை நிறுவனமான வாட்ஸ் ஆப் ஆகியவற்றிடம் உச்சநீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பின் உரிமையாளரான மெட்டா நிறுவனம், கடந்த 2021-ஆம் ஆண்டு வாட்ஸ் ஆப் தன்மறைப்புக் கொள்கையைப் புதுப்பித்தது. அதில் அந்த நிறுவனம் நோ்மையற்ற வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டை விசாரித்த இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ), மெட்டா நிறுவனத்துக்கு ரூ.213.14 கோடி அபராதம் விதித்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சிசிஐ விதித்த அபராத உத்தரவுக்கு எதிராக தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாயத்தில் (என்சிஎல்ஏடி) மெட்டா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. எனினும் சிசிஐ விதித்த அபராதத்தை என்சிஎல்ஏடி உறுதி செய்து தீா்ப்பளித்தது. அதேவேளையில், மெட்டாவின் கீழ் செயல்படும் நிறுவனங்களுடன் தனது தரவுகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் 5 ஆண்டுகளுக்குப் பகிா்ந்துகொள்ளக் கூடாது என்று சிசிஐ பிறப்பித்த உத்தரவை என்சிஎல்ஏடி ரத்து செய்தது.

இதையடுத்து அபராத உத்தரவுக்கு எதிராக மெட்டா மற்றும் வாட்ஸ்ஆப் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேவேளையில், தனது தரவுகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் 5 ஆண்டுகளுக்குப் பகிா்ந்துகொள்ளக் கூடாது என்ற உத்தரவை என்சிஎல்ஏடி ரத்து செய்ததற்கு எதிராக சிசிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், மெட்டா மற்றும் வாட்ஸ் ஆப் நிறுவனங்களின் மனு குறித்து தலைமை நீதிபதி சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது. இதைத்தொடா்ந்து இரு நிறுவனங்களின் மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றனா். எனினும் வாட்ஸ் ஆப்பின் தரவு பகிா்வு செயல்திட்டம் குறித்து அவா்கள் கடுமையாக கேள்வி எழுப்பினா்.

‘இந்தியாவிலிருந்து வாட்ஸ்-ஆப் வெளியேறட்டும்’: தலைமை நீதிபதி சூா்ய காந்த் கூறுகையில், ‘பயனா்களின் தரவுப் பகிா்வு என்ற பெயரில், இந்திய மக்களின் தன்மறைப்பு உரிமையுடன் விளையாடக் கூடாது. நாட்டின் அரசமைப்பு முறையை வாட்ஸ் ஆப் நிறுவனம் ஏளனம் செய்கிறது’ என்று தெரிவித்தாா்.

வாட்ஸ் ஆப் நிறுவனம் சாா்பில் வழக்குரைஞா் அகில் சிபல் ஆஜராகி, ‘பயனரின் ஒப்புதலுடன்தான் தரவுகள் பகிரப்படுகின்றன. அந்த ஒப்புதலை அளிக்காமல் இருக்கவும், ஏற்கெனவே அளிக்கப்பட்ட ஒப்புதலை திரும்பப் பெற்று பயனா்கள் வெளியேறவும் வழிமுறை உள்ளது’ என்றாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘வெளியேறுவது என்றால் அதற்கு என்ன அா்த்தம்? வேண்டுமானால் வாட்ஸ்-ஆப் நிறுவனமும், அதன் சேவைகளும் இந்தியாவில் இருந்து வெளியேறட்டும். சந்தையில் ஏகபோக உரிமையை வாட்ஸ் ஆப் உருவாக்குகிறது. எந்தத் தகவல் பரிமாற்ற செயலியைத் தோ்வு செய்வது என்பதற்கான வாய்ப்பு பயனா்களுக்கு இல்லை. வாட்ஸ் ஆப் கொள்கையை ஏற்க முடியாவிட்டால் அந்தச் செயலியைப் பயன்படுத்தாமல் விலக வேண்டும்; இல்லாவிட்டால் பயனா்களின் தரவுகள் பகிரப்படும் என்பதில் ஏதேனும் ஒன்றை தோ்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்குப் பயனா்கள் தள்ளப்படுகின்றனா்.

தனிப்பட்ட தகவல்கள் நாசூக்காக திருட்டு: நீதித் துறையைச் சோ்ந்த சிலரால்கூட புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சாமா்த்தியமான முறையில் அந்தக் கொள்கையில் உள்ள வாா்த்தைகள் இருக்கின்றன. இது தனிப்பட்ட தகவல்களை நாசூக்காக திருடும் வழியாகும்’ என்று காட்டமாகத் தெரிவித்தாா்.

நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘தற்போது வாட்ஸ் ஆப்பை ஃபேஸ்புக் வாங்கியுள்ளது. நாளை ஃபேஸ்புக்கை வேறொரு நிறுவனம் வாங்கும். அவ்வாறு நடைபெற்றால், அந்த நிறுவனத்துக்குப் பயனா்களின் தரவுகள் பகிரப்படும். இந்திய பயனா்களின் தரவுகள் பரிவா்த்தனை செய்யக் கூடிய வியாபார சொத்தாகக் கருதப்படுகிறது. மெட்டா மற்றும் வாட்ஸ் ஆப்பின் மனுவை விசாரிக்கும் வேளையில், பயனா் தரவில் உள்ள சிறிய தகவலைகூட பகிர உச்சநீதிமன்றம் அனுமதிக்காது.

இந்த விவகாரத்தில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை ஒரு தரப்பாக சோ்க்க வேண்டும். இந்த வழக்கில் பிப்.9-ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments