இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயம் மற்றும் பால்வளம் போன்ற நாட்டின் முக்கியத் துறைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த திங்களன்று (பிப். 2) ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும், இந்தியப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத வரியை 18 ஆகக் குறைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மக்களவையில் பியூஷ் கோயல் கூறுகையில்,
போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா மீதான வரி விகிதம் மிகக் குறைவானவற்றில் ஒன்றாகும்.
விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளைப் பாதுகாப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவில் பொருள்களைத் தயாரிப்போம், இந்தியாவில் வடிவமைப்போம் போன்ற முயற்சிகளை ஊக்குவிக்க உதவும். இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும்.
வரி விகிதம் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்ட பிறகு, அதிக தொழிலாளர்களைக் கொண்ட துறைகளில் ஏற்றுமதிக்கு ஒரு பெரிய உத்வேகம் கிடைக்கும்.
இந்த ஒப்பந்தமானது திறமையான இந்தியர்களுக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் பெரும் வாய்ப்புகளை உருவாக்கும்.
இருதரப்பினரும் தொழில்நுட்ப செயல்முறைகளை நிறைவு செய்வதில் பணியாற்றி வருவதாகவும், விரைவில் இது அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியர்களுக்கான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் முதன்மை முன்னுரிமையாகும். மேலும், விமானப் போக்குவரத்து மற்று அணுசக்தி போன்ற துறைகளிலிருந்து இந்தியாவுக்குப் பொருள்கள் தேவை என்றும், இந்தத் துறைகளில் அமெரிக்கா ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.