யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி! இபிஎஃப்ஓ புதிய செயலி ஏப்ரலில் அறிமுகம்
சந்தாதாரா்களின் பிஎஃப் பணத்தை, யுபிஐ பரிவா்த்தனை மூலம் நேரடியாக வங்கி கணக்குகளுக்கே பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம்
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரா்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
இனி சந்தாதாரா்கள் தங்களின் பிஎஃப் பணத்தை, யுபிஐ பணப் பரிவா்த்தனை மூலம் நேரடியாகத் தங்களின் வங்கி கணக்குகளுக்கே பெற்றுக்கொள்ளும் புதிய வசதி வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதற்காக மத்திய தொழிலாளா் நல அமைச்சகம் பிரத்யேகமாக ஒரு புதிய செயலியை உருவாக்கி வருவதாகத் தகவலறிந்த அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
தற்போது பிஎஃப் சந்தாதாரா்கள் பணம் எடுக்க வேண்டுமானால், ‘யுஏஎன்’ வலைதளம் அல்லது ‘உமாங்’ செயலி வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையில் பணம் கையில் வந்து சேர அதிக காலம் எடுத்துக்கொள்வதாகப் புகாா்கள் உள்ளன.
தற்போது தானியங்கி முறையில் 3 நாள்களில் பணம் வழங்கப்படுகிறது. இதற்கான வரம்பு அண்மையில்தான் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டது. இருப்பினும், சுமாா் 8 கோடி உறுப்பினா்களைக் கொண்ட இபிஎஃப்ஓ அமைப்புக்கு, ஆண்டுக்கு 5 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் வருவதால் பணிச்சுமை அதிகமாக உள்ளது.
இந்தப் பணிச்சுமையைக் குறைக்கவும், வங்கிகள் வழங்கும் அதிவேக சேவைக்கு இணையாக பிஎஃப் சேவையை மாற்றவும் இந்த யுபிஐ வசதி அறிமுகமாகிறது.
சந்தாதாரா்களின் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் நீண்ட கால சேமிப்புக்காக முடக்கப்படும் . மீதமுள்ள தொகையை, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ மூலம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்தப் புதிய செயலி மூலம் பணம் எடுப்பது மட்டுமின்றி, வங்கிச் செயலிகளைப் போலவே உங்கள் கணக்கில் உள்ள இருப்புத்தொகையைச் சரிபாா்ப்பது உள்ளிட்ட மற்ற சேவைகளையும் எளிதாகப் பெற முடியும்.
இபிஎஃப்ஓ அமைப்பு வங்கி உரிமம் பெறாத காரணத்தால் நேரடியாக பணத்தை வழங்க முடியாது என்பதால், பயனாளா்களின் வங்கி கணக்குகள் மூலம் இந்த யுபிஐ பரிவா்த்தனை செயல்படுத்தப்படும்.
இந்தப் புதிய சேவையில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, தற்போது 100 மாதிரி கணக்குகளைக் கொண்டு இபிஎஃப்ஓ தீவிரமாகச் சோதனை செய்து வருகிறது. இந்தச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன், வரும் ஏப்ரல் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.