நரவணே புத்தக விவகாரத்தில் மெளனம் காக்கும் மத்திய அரசு! காங்கிரஸ் போராட்டம்!
மத்திய அரசுக்கு எதிராகப் போராடிய நூற்றுக்கும் அதிகமான காங்கிரஸார் கைது...
ராணுவ முன்னாள் தலைமை தளபதி எம்.எம். நரவணே புத்தக விவகாரத்தில், மத்திய அரசு பதில் அளிக்காமல் மெளனம் காத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று (பிப். 10) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்தியா - அமெரிக்கா வணிக ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
ராணுவ முன்னாள் தலைமை தளபதி எம்.எம். நரவணே எழுதிய சுயசரிதை புத்தகத்தில், 2020ஆம் ஆண்டு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியா - சீனா இடையிலான மோதலின்போது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல், பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று மக்களவையில் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதனையடுத்து நரவணே புத்தகத்தில் இடம்பெற்றிருந்த வரிகள், நிகழ்வுகள் பலரால் விவாதத்திற்குள்ளானது. இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய அரசு பதில் அளிக்காமல் மெளனம் காத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய இளைஞர் காங்கிரஸின் செய்தித்தொடர்பாளர் இது தொடர்பாக பேசும்போது, தில்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, 150 பேரை காவல் துறையினர் கைது செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நலனில் நாட்டின் தலைவர் ஒருவர் சமரசம் செய்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, பதில் கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, இந்தியா - அமெரிக்கா இடையிலான வணிக ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், விவசாயிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்படும் சூழல் நிலவுவதாகவும், இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயன்றனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.