மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தாக்கல் செய்துள்ளார்.
மேலும், தேர்தலில் போட்டியிட ராகுல் காந்திக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய ராகுல் காந்தி, எப்ஸ்டீன் கோப்புகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை தொடர்புபடுத்தி பேசினார்.
மேலும், நாட்டையும், பாரத மாதாவையும் எப்ஸ்டீன் கோப்புகளுக்கு பயந்து பிரதமர் மோடி விற்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டை ராகுல் முன்வைத்தார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் அறிவிப்பின்றி மக்களவையில் முன்வைத்த ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்படும் என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் தனிநபர் தீர்மான நோட்டீஸை மக்களவை செயலகத்தில் நிஷிகாந்த் துபே தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய நிஷிகாந்த், “நாட்டை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ராகுல் காந்திக்கு யார் நிதி அளிக்கிறார்கள்? வெளியாகாத புத்தகம் அவருக்கு கிடைத்தது எப்படி?” உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்.
வெளியாகாத நரவணே புத்தகம் புழக்கத்தில் வந்தது குறித்து தில்லி காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.