மகாராஷ்டிரத்தில் சாதியைப் புறக்கணித்து அனைவரும் சமம் என்ற நோக்கோடு செயல்பட்டுள்ள கிராமம் அனைவரையும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
கிராமங்கள் நாட்டின் முதுகெலும்புகள் என தேசப்பிதா மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றத்தில் வழிவகுக்கும் என்ற வகையில், மகாராஷ்டிரத்தின் அஹில்யநகர் மாவட்டத்தில் உள்ள சௌந்தாலா கிராமத்தினர் தங்களை சாதியில்லாத கிராமமாக அறிவித்துக்கொண்டுள்ளனர்.
கிராமத்தில் உள்ளவர்களை சாதி அடிப்படையிலான பாகுபாட்டில் இருந்தும், சாதி ரீதியிலாக அவர்களை தனிமைப்படுத்தில் இருந்தும் காக்க இந்த துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிப்.5 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மகாராஷ்டிரத்தில் பிறந்த பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பு முகவுரை குறித்து கிராம மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை கிராமத் தலைவர் ஷரத் அர்கடே முன்மொழிந்தார். பாபாசாகேப் போடக் வழிமொழிந்தார்.
அந்தக் கூட்டத்தில் சாதியையும் மதத்தையும் யாரும் இங்கு பின்பற்றமாட்டார்கள். மனிதநேயத்தை மதமாக பின்பற்றுவோம். அதுதான் மக்கள் பின்பற்றவேண்டிய மதம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அந்தத் தீர்மானத்தில், மனித நேயம் தான் எனது சாதி. இந்த அரசும் சமுதாயமும் மக்களுக்காக எப்போதும் தயாராக இருக்கும். சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் இருக்காது. பள்ளிகள், சமுதாய அரங்கம், கோயில்கள், கிணறு, இடுகாடு உள்ளிட்ட இடங்கள் அனைவருக்குமானவை.
சமூக ஊடகங்களில் சாதி ரீதியிலாக பதிவுகளை யாரும் போடமாட்டார்கள். அவ்வாறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பி. ஆர். அம்பேத்கர், ஜோதிபாய் புலே, சாஹூ மகாராஜ், சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா காந்தி ஆகியோரின் தூண்டுதலால் சாதியில்லாத கிராமத்தை உருவாக்க முற்பட்டுள்ளதாக பெருமிதம் கொண்டுள்ளனர் கிராமத்தினரும் நிர்வாகிகளும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.