கிரியேட் இன் இந்தியா திட்டம் : ஏஐ உச்சி மாநாட்டில் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு
செய்யறிவு தொழில்நுட்பங்களை கையாள்பவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனக் கோரிக்கை.
தொழில் துறையை வளப்படுத்துவதற்காக பொறுப்பான செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் வகையில் கிரியேட் இன் இந்தியா திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (பிப். 16) தெரிவித்தார்.
தொழில் துறையை வளப்படுத்துவது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது போன்ற எதிர்காலம் சார்ந்த தேவைகளுக்காக இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடா்பான ஏஐ உச்சிமாநாடு இன்று (பிப். 16) தொடங்கியது. தில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்றுவரும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து கண்காட்சியைப் பார்வையிட்டார்.
Advertisement
Advertisement
மாநாட்டின் முதல் நாளில் மோஷன் பிக்சர்ஸ் அசோசியேஷன் நிறுவனத்தின் தலைவர் சார்லஸ் ரிவ்கின் உடன் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:
"மிக விரைவில் கிரியேட் இன் இந்தியா திட்டம் தொடங்கப்படவுள்ளது. தொழில் துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு போன்ற எதிர்கால நலனுக்காக இத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
இது நம்மிடம் இருப்பதை வலுப்படுத்துவதையும், உலகிற்கு மிகவும் விருப்பமான தளமாக மாறுவதை உறுதி செய்யும். இது மட்டுமின்றி அடுத்த 25 ஆண்டுகளுக்கு நமக்குத் தேவையான வளர்ச்சியைத் தக்கவைக்கும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறமையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
நம் வாழ்வில் செய்யறிவு தொழில்நுட்பமானது நீர்த்துப்போகும் விளைவாக இருக்கக்கூடாது, மாறாக தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். இதனையே உலக நாடுகளும் அளவுகோலாகக் கொண்டுள்ளன.
நமது சமூகத்தின் கட்டமைப்பையே டீப்ஃபேக் மற்றும் தவறான தரவுகள் ஆட்டம் காணச் செய்கின்றன. மனித சமூகத்தில் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் செய்யறிவு தொழில்நுட்பங்களை கையாள்பவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
ஏஐ வருகையால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளதா? என்பதற்கு பதில் அளித்துப் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், "இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் திறமையானவர்கள் ஏராளம் உள்ளனர். இயற்கையான வளர்ச்சி அனைத்துத் துறைகளிலுமே உள்ளது. அதனை நோக்கி நாம் சென்றுக்கொண்டிருக்கிறோம்.
மத்திய பட்ஜெட்டில், 15000 பள்ளிகளில் கன்டன்ட் கிரியேட்டர்களுக்கான ஆய்வகங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் துறையில் 350 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த உலகின் மிகச்சிறந்த மாணவர்கள் நம்மிடம் உள்ளனர். இதேபோன்று செய்யறிவு துறையிலும் ஏராளமான மாணவர்கள் உள்ளனர்" என அமைச்சர் பேசினார்.
India AI Impact Summit: govt will launch Create in India mission Railway Minister Ashwini Vaishnaw
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.