ஜூலை 15-க்குள் மேம்படுத்தப்பட்ட புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! அஸ்வினி வைஷ்ணவ் உறுதி
ஐஆர்சிடிசி இணையதளம் மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது பற்றி...
மேம்படுத்தப்பட்ட புதிய ஐஆர்சிடிசி இணையதளம் வருகிற ஜூலை 15 ஆம் தேதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுடன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உரையாடினார்.
அப்போது ஐஆர்சிடிசி இணையத்தில் 'கேப்ச்சா' (captcha) உள்ளிடும்போது பிரச்னை ஏற்படுவதாகவும் அதனை சரிசெய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Advertisement
Advertisement
உடனே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினார்.
அதன்பின்னர், 'புதிய ஐஆர்சிடிசி இணையதளம் வேண்டும்' என்ற மாணவர்களின் கோரிக்கையையடுத்து, வருகிற ஜூலை 15 ஆம் தேதிக்குள் மேம்படுத்தப்பட்ட புதிய ஐஆர்சிடிசி இணையதளம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். மாணவர்களுடன் அமைச்சர் பேசிய இந்த விடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, பலரும் பல விதமான பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். சிலருக்கு 'லாக்-இன்' ஆவதில்லை. சிலருக்கு பணம் செலுத்த முடிவதில்லை. எனினும் ஒரு சில நிமிடங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு முடிந்து விடுகிறது. சமீபமாக 'லாக் -இன்' செய்து அனைத்து உள்ளீடுகளையும் அளித்து தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு 'புக் நௌ' (book now) என்பதை கிளிக் செய்தால் 'high load' என்று வருகிறது. ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்வதால் இவ்வாறு வருவதாக ரயில்வே தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட புதிய ஐஆர்சிடிசி இணையதளம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளது ரயில் பயணிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.