90% ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பொதுப் பிரிவினர்! மாநிலங்களவையில் தகவல்
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்...
கடந்த 5 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2,834 பணியிடங்கள் (18.6 சதவீதம்) நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக மாநிலங்களவை உறுப்பினரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஜான் பிரிட்டஸ், நாட்டிலுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் பணியிடங்களுக்கான ஒட்டுமொத்த எண்ணிக்கை, காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து விளக்கம் கேட்டிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த கேள்விக்கு மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக கடந்த பிப். 12 ஆம் தேதி பதிலளித்துள்ளார்.
தரவுகளின்படி, நாடு முழுவதும் ஐஏஎஸ் (6877), ஐபிஎஸ் (5099) மற்றும் ஐஎஃப்எஸ் (3193) ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 15,169 பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனவரி 1, 2025 நிலவரப்படி, 2,834 பணியிடங்கள், அதாவது 18.6 சதவீதப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 5577 ஐஏஎஸ், 4,594 ஐபிஎஸ் மற்றும் 2,164 ஐஎஃப்எஸ் என மொத்தம் 12,335 அதிகாரிகள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்திய குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 92% ஐஏஎஸ், 90% ஐபிஎஸ் மற்றும் 82% ஐஎஃப்எஸ் அதிகாரிகள் பொதுப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
ஐஏஎஸ்
ஓபிசி - 245 (4.39%)
எஸ்சி - 135 (2.42%)
எஸ்டி - 67 (1.2%)
ஐபிஎஸ்
ஓபிசி - 255 (5.5%)
எஸ்சி - 141 (3.06%)
எஸ்டி - 71 (1.54%)
ஐஎஃப்எஸ்
ஓபிசி - 231 (10.67%)
எஸ்சி - 95 (4.39%)
எஸ்டி - 48 (2.21%
முன்னதாக, நீதிபதிகள் நியமனங்கள் குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு, உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 80% பேர் பொதுப் பிரிவினர் என்று பதிலளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
90% of IAS and IPS officers in the country are general category! Rajya Sabha Data
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.