ஜார்க்கண்டில் சத்ரா மாவட்டத்தில் குழந்தை கடத்துபவர் என்ற சந்தேகத்தின்பேரில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபர்வார் காவல் நிலையப் பகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஞாயிறன்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிராயடட்டாண்ட் மற்றும் கிச்சோ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ராம்கர் மாவட்டத்தில் உள்ள பர்வடோலியைச் சேர்ந்த ரம்பாலி ராஜ்வார் என்பவரை அடித்துக் கொன்றனர். இவர் பலத்த காயமடைந்த நிலையில் திங்களன்று உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. குழந்தை கடத்த வந்தவர் என்று நினைத்து மக்கள் அனைவரும் அவரை அடித்துக் கொன்றுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
விடியோ காட்சிகளின் அடிப்படையில் முதல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என எஸ்பி சுமித் குமார் அகர்வால் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் பிரயாக் மஹ்தோ (40), மகேந்திர மஹ்தோ என்கிற தருண் மஹ்தோ (28), சுரேந்திர மஹ்தோ (32), மற்றும் பசந்த் முண்டா (25) ஆகியோர் ஆவர்.
இறந்தவரின் சகோதரர் புவனேஷ்வர் ராஜ்வாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்தார்.
புவனேஷ்வர் தனது சகோதரர் சிறிது காலமாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.