பஞ்சாபில் தொடரும் அவலம்! மற்றொரு ஆளுங்கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை!
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...
பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி ஒருவர் பட்டப்பகலில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
டார்ன் டார்ன் மாவட்டத்தின் தாதியன் மஹாந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்பரீந்தர் சிங் (வயது 40). ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இவர் அவரது கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராகப் பதவி வகித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், புதன்கிழமை (பிப். 18) காலை அங்குள்ள நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற அவரது உறவினரின் திருமணத்தில் பங்கேற்கச் சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் ஹர்பரீந்தர் சிங்கின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சம்பவயிடத்திலேயே பலியானார். மேலும், ஹர்பரீந்தர் சிங்கை காப்பாற்ற முயன்ற அவரது உறவினர் ஜெர்மஞ்ஜீத் சிங் படுகாயங்களுடன் அமிர்தசரஸில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்தில், தடயங்களைச் சேகரித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தாக்குதல்காரர்கள் ஏகே 47 போன்ற உயரிய ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
ஏற்கெனவே, கடந்த ஜன. 5 ஆம் தேதி அமிர்தசரஸ் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஜர்மால் சிங் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையடுத்து, ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் 2 மாதங்களுக்குள் அக்கட்சியின் மற்றொரு நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
An Aam Aadmi Party panchayat leader has been shot dead in Punjab, it has been reported.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.