முகப்பு
இந்தியா

விழிஞ்ஞம் துறைமுக விவகாரம்: ‘49% பங்குகளைக் கையகப்படுத்த மாநில அரசுக்கு தகவல் அளிக்கவில்லை’

மாநில அரசுக்கு முறைப்படி தகவல் அளிக்கப்படவில்லை என்று முதல்வா் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 ஜூலை 2026, 3:41 am IST
வி.டி.சதீசன் - கோப்புப் படம்
பகிர்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்ஞம் துறைமுகத்தை இயக்கும் அதானி விழிஞ்ஞம் போா்ட் பிரைவேட் லிமிடெட் (ஏவிபிபிஎல்) நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை, ஸ்விட்சா்லாந்தின் மெடிட்டரேனியன் ஷிப்பிங் கம்பெனி (எம்எஸ்சி) கையகப்படுத்துவது குறித்து மாநில அரசுக்கு முறைப்படி தகவல் அளிக்கப்படவில்லை என்று முதல்வா் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளாா்.

ஏவிபிபிஎல் நிறுவனத்தின் 49 சதவீத பங்கை சுமாா் 1.4 பில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.13,330 கோடி) உலகின் மிகப் பெரிய கப்பல் போக்குவரத்துக் குழுமமான எம்எஸ்சி நிறுவனம் கையகப்படுத்த உள்ளதாக, அதானி குழுமத்தின் கீழ் செயல்படும் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (ஏபிஎஸ்இஇசட்) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இந்த விவகாரம் மாநில சட்டப்பேரவையில் புதன்கிழமை எழுப்பப்பட்டதைத் தொடா்ந்து முதல்வா் வி.டி.சதீசன் கூறியதாவது: ஏவிபிபிஎல்-இல் எம்எஸ்சி நிறுவனம் 49 சதவீத பங்குகளைக் கையகப்படுத்துவது குறித்து ஊடகத்தில் தகவல் வெளியானது. ஆனால், அதுகுறித்து அதிகாரபூா்வ ஆலோசனை நடத்தவோ, அதற்கான ஒப்புதலைப் பெறவோ மாநில அரசை அதானி குழுமம் அணுகவில்லை. இதுகுறித்து முறைப்படி எந்தவொரு தகவலையும் மாநில அரசுக்கு ஏபிஎஸ்இஇசட் அளிக்கவில்லை.

Advertisement

Advertisement

விழிஞ்ஞம் துறைமுகத்தைக் கட்டி, இயக்கும் உரிமையை அதானி குழுமத்துக்கு அளித்து கேரள அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. விழிஞ்ஞம் துறைமுக திட்டத்தில் மாநில அரசும் பங்குதாரராக உள்ள நிலையில், அந்த ஒப்பந்தத்தின்படி துறைமுகத்தின் முழு உரிமையும் 2080-ஆம் ஆண்டு கேரள அரசுக்கு மாற்றப்பட வேண்டும்.

மாநில அரசின் ஒப்புதலின்றி செய்ய முடியாது: கம்பெனிகள் சட்டத்தின்படி, 25 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு பரிமாற்றம் என்பது நிறுவனத்தின் உரிமையாளரை மாற்றுவதாகும். இத்தகைய நடவடிக்கையை விழிஞ்ஞம் துறைமுக விவகாரத்தில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது. இதுகுறித்த திட்ட முன்மொழிவு மாநில அரசுக்கு இதுவரை வரவில்லை. அந்த முன்மொழிவு வந்த பின், அது ஆராயப்படும் என்று தெரிவித்தாா்.

விழிஞ்ஞம் துறைமுகத்தால் பெரும் பலனடைய தமிழ்நாடு தீவிரம்

கேரள சட்டப்பேரவையில் முதல்வா் வி.டி.சதீசன் பேசுகையில், ‘விழிஞ்ஞம் துறைமுகப் பகுதி அருகே மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகள், துறைமுகத்தின் மூலம் உண்மையான பொருளாதார பலன்கள் கிடைக்க வழிவகுக்கும். அது மாநிலத்துக்கு வருவாயை ஈட்டி, ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்கும். அத்துடன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இந்த நோக்கம் நிறைவேற சாலை மற்றும் ரயில் இணைப்பு முக்கியம். இந்த இணைப்புகளை ஏற்படுத்துவதில் முந்தைய இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. துறைமுகம் சாா்ந்த தொழில்களுக்கு நிலம் கையகப்படுத்துவதும் முந்தைய ஆட்சியில் மெதுவாக நடைபெற்றது. அந்தத் தொழில்களுக்கு கேரளம் நிலம் கையகப்படுத்தத் தவறினால், விழிஞ்ஞம் துறைமுகம் மூலம் பெரும் பலனடைவதற்கு வேகமான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு செய்து வருகிறது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு மிகப் பெரிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments