வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000 எரிவாயு சிலிண்டர்கள்!
மகாராஷ்டிரத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3,000 எரிவாயு சிலிண்டர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
மகாராஷ்டிரத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3,000 சிலிண்டர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
மகாராஷ்டிரத்தில் மும்பை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஒரு வாரமாக தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் இதுவரை 13-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதில், ராய்கட் மாவட்டம் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள பரவலான வெள்ளப்பெருக்கு இயல்பு வாழ்க்கையைப் மோசமாக பாதித்துள்ளது.
Advertisement
Advertisement
ராய்காட் மாவட்டத்தில் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஹெச்பிசிஎல் பாதள்கங்கா எரிவாயு சிலிண்டர் ஆலையின் சுவர் இடிந்து விழுந்து 3,000 சிலிண்டர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பாதள்கங்கா ஆற்றில் மிதந்து வருவதும், பாலத்தின் மேலிருந்து மக்கள் கூட்டமாக அதனைப் பார்ப்பதும் விடியோவில் பதிவாகியுள்ளது.
இடைவிடாத மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் ஆலையின் சுவர் இடிந்து, ஆலை முழுவதும் வெள்ளம் பாய்ந்ததாகவும், ஆயிரக்கணக்கான சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதில், பல சிலிண்டர்களில் எரிவாயு நிரம்பியிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சிலிண்டர்களை மக்கள் எடுக்கவோ, பயன்படுத்தவோ வேண்டாமென ராய்காட் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ”ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களில் எரிவாயு உள்ளதா அல்லது அவை பாதுகாப்பான நிலையில் உள்ளனவா என்பது குறித்து எந்த உத்தரவாதமும் இல்லை. ஆர்வம் காரணமாக அவற்றை எடுத்துச் செல்வதும், பயன்படுத்துவதும் ஆபத்தில் முடியலாம்” என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் சிலிண்டர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டால் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கரையொதுங்கும் சிலிண்டர்களை ஹெச்பிசிஎல் ஆலையைச் சேர்ந்த டீலர்களிடம் தகவல் தெரிவித்து ஒப்படைக்குமாறு அந்தப் பகுதி அதிகாரிகளும் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.
3,000 gas cylinders washed away in the floods!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.