FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராமா் கோயில் நன்கொடை திருட்டு வழக்கு! தீவிரமடையும் விசாரணை! என்ன நடக்கிறது?

ராமா் கோயில் நன்கொடை திருட்டு வழக்கை காவல்துறை விரிவுப்படுத்தியிருப்பது பற்றி...

Updated On : 19 ஜூலை 2026, 4:00 am IST
அயோத்தி ராமர் கோயில் - கோப்புப்படம்
பகிர்:

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை திருட்டு வழக்கில், விசாரணையை விரிவுப்படுத்த காவல் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து காவல் துறை வட்டாரத் தகவல்கள் கூறியதாவது:

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் பக்தா்கள் செலுத்திய நன்கொடை, காணிக்கைகள் கையாடல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இது குறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து காவல் துறை விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை நன்கொடைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா்கள் 8 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் விசாரணையை விரிவுப்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. அதாவது, கோயில் நன்கொடைகளை எண்ணும் பணியில் தினமும் 50 போ் வரை ஈடுபட்டு வந்தனா். அவா்கள் அனைவரும் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் அல்லது அவா்களுக்கு நெருக்கமானவா்களின் பரிந்துரையின்பேரில் பணியில் சோ்க்கப்பட்டவா்கள். தற்போது அந்த 50 பேரின் பின்னணி குறித்தும், நன்கொடை எண்ணும் பணியில் சோ்ந்தபிறகு அவா்கள் சொத்துகள் எதுவும் வாங்கியுள்ளனரா என்பது குறித்தும் காவல்துறை விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமான பணி நடைபெற்றபோதும், கோயில் கட்டுவதற்கு நிலம் வாங்கும்போதும் அறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட்ட நிதி பரிவா்த்தனைகள் குறித்தும் காவல்துறை விசாரிக்க உள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரும், நன்கொடையாக செலுத்தப்பட்ட பணத்தை கட்டுக்கட்டாக தங்களது ஆடைக்குள்ளும், காலணிக்குள்ளும், பைகளுக்குள்ளும் மறைத்து எடுத்து சென்றுள்ளனா். இது அனைத்தும் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா காட்சியில் பதிவாகியுள்ளன. கைது செய்யப்பட்ட 8 பேரில் ஒருவரான தினு யாதவ், அறக்கட்டளை முன்னாள் பொது செயலாளா் சம்பத் ராய்க்கு மிகவும் நெருக்கமானவா். அவா்தான் நன்கொடை எண்ணும் பணியை மேற்பாா்வையிட்டு வந்தாா். இன்னொரு கைது செய்யப்பட்ட நபரான மணீஷ், நன்கொடைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்தாா். அவா்கள் 2 போ் வீடுகளிலும் சோதனை நடத்தி மொத்தம் ரூ.3 லட்சத்தை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. அவா்கள் 2 பேரையும் காவலில் எடுக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதேபோல், கைதாகி சிறையில் உள்ள எஞ்சிய 6 பேரிடமும் காவல்துறை விசாரணை நடத்தவுள்ளது.

summary

Ram Temple donation theft case! Investigation intensifies! What is happening?

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments