சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!
ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டிருப்பது பற்றி...
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணியை முன்னிட்டு, ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் சுற்றுப் பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த ஒரு மாதமாக சிஜேபி போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று காலை கூடவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து அசம்பாவிதங்களைத் தவிர்க்க 163 தடைச் சட்டத்தை தில்லி முழுவதும் காவல்துறையினர் நேற்று மாலை அமலுக்கு கொண்டுவந்தனர்.
நாடாளுமன்றம், ஜந்தர் மந்தர் சுற்றுப் பகுதிகள் முழுவதும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தில்லியின் பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஜந்தர் மந்தர் பகுதிகளை இணைக்கும் சாலைகளை காவல்துறையினர் மூடியுள்ளனர். உள்ளேவும், வெளியேவும் யாரையும் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற சுற்றுப் பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான குறுஞ்செய்திகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் மொபைல் போன்களுக்கு வந்திருக்கிறது.
மேலும், ஜந்தர் மந்தர் பகுதியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற ஒரு பகுதி இளைஞர்கள், மாணவர்கள் மீது துணை ராணுவப் படையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
CJP protest - Internet services suspended in Jantar Mantar and Parliament areas!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.