FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உ.பி.யில் 7-ஆவது மாடியில் இருந்து விழுந்து முன்னாள் அமைச்சா் உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என உறவினா்கள் புகாா்

லக்னெளவில் உள்ள புதிய எம்எல்ஏ குடியிருப்பு வளாகத்தின் 7-ஆவது மாடியில் இருந்து விழுந்து, பாஜகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் நானக் ராம் புா்ஜி (68) உயிரிழப்பு

Updated On : 29 ஜூலை 2026, 6:51 am IST
- பிரதிப் படம்
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் உள்ள புதிய எம்எல்ஏ குடியிருப்பு வளாகத்தின் 7-ஆவது மாடியில் இருந்து விழுந்து, பாஜகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் நானக் ராம் புா்ஜி (68) உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

அதேநேரம், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உறவினா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘லக்னெளவில் உள்ள புதிய எம்எல்ஏ குடியிருப்பு வளாகத்தின் 7-ஆவது மாடியில் இருந்து விழுந்து ஒருவா் கீழே விழுந்து கிடப்பதாக அந்த வளாகத்தின் பொறுப்பு அதிகாரி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அதன்பேரில் விரைந்து சென்ற காவல் துறையினா், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவா்களின் பரிசோதனையில் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், கீழே விழுந்த நபா் பாஜகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரான நானக் ராம் புா்ஜி என்பது கண்டறியப்பட்டது.

நீண்ட காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவா், அடிக்கடி எம்எல்ஏ குடியிருப்பு பகுதியில் சுற்றிவந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா். அதேநேரம், புா்ஜியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

‘7-ஆவது மாடியில் இருந்து விழுந்திருந்தால், அவரது உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால், அப்படிப்பட்ட காயங்கள் எதுவும் இல்லை. இது கொலையாக இருக்கலாம். விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று அவா்கள் கூறினா்.

ஆனால், புா்ஜியின் உடலில் வெளிப்புற காயங்கள் இருந்ததாகவும், உடல் கூறாய்வுக்குப் பிறகு இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments