ஹிமாச்சலில் நாளை கனமழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஐந்து மாவட்டங்களில் நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஐந்து மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) ஆலங்கட்டி மழை, இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், 'ஆரஞ்சு' எச்சரிக்கையை விடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
காங்ரா, மண்டி, குல்லு, சிம்லா மற்றும் சிர்மௌர் ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களின் ஆங்காங்கே சில இடங்களில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை வரை ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம். அதே வேளையில், ஜூன் 9 ஆம் தேதி வரை மாநிலத்தில் மழைப்பொழிவு நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நேற்று முதல் கடந்த 24 மணி நேரத்தில், இப்பகுதியின் பல இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவானது. சிம்லா, முராரி தேவி மற்றும் காங்ரா ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழையும், தாபோ மற்றும் சுந்தர்நகர் ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசியது.
குகும்சேரியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.6 டிகிரி செல்சியஸாகப் பதிவான நிலையில், மாநிலத்திலேயே மிகவும் குளிரான இடமாக திகழ்ந்தது. அதே சமயம், நேரியில் அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.