ஜேஇஇ தரவுகள் கசிந்தனவா? ஐஐடி மும்பை விளக்கம்!
ஜேஇஇ தரவுகள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து ஐஐடி மும்பை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது பற்றி...
ஐஐடி நடத்திய ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியான சில நாள்களில், தரவுகள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் ஐஐடி மும்பை சார்பில் வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி நடத்திய ஜேஇஇ இரண்டாம் நிலைத் தேர்வெழுதிய ஏறக்குறைய 1.79 இலட்சம் மாணவர்களின் தரவுகள் இணையத்தில் பாதுகாப்பற்ற முறையில் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது.
இதற்கு விளக்கம் அளித்த ஐஐடி மும்பை அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
லட்சக்கணக்கான மாணவர்களைப் பாதித்த தரவுக் கசிவு மற்றும் தனியுரிமை மீறல் குறித்த கருத்துகள் தவறானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை. சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை. அதுமட்டுமல்லாமல், அவை உண்மையில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக வெளியிடவில்லை. உண்மைக்கு முற்றிலும் மாறான தகவல்களைப் பரப்ப முயற்சி நடைபெறுகிறது.
கடந்த ஜூன் 2 ஆம் தேதி, அனுமதி அட்டை தொடர்பான தரவுகளைப் பார்ப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு , சில தொழில்நுட்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் விளைவாக, கிளவுட் சேமிப்பகத்தில் குறைந்த அளவிலான, தற்காலிகப் பிழை ஏற்பட்டது. ரைலன் அனில் என்ற ஹேக்கர், இந்தப் பிழையைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட தரவுத்தளத்தை தன்னால் பார்க்க முடிவதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்தப் பிரச்னை உடனடியாகச் சரிசெய்யப்பட்டு, தரவுகள் பாதுகாக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட சேமிப்பகம் படிக்க மட்டுமே முடியும் வகையில்தான் இருந்தது. அதாவது எந்தத் தரவையும் திருத்தவோ அல்லது நீக்கவோ முடியவில்லை. மேலும், கிளவுட் பகுப்பாய்வு, மொத்தமாக எந்தத் தரவுகளும் பதிவிறக்கம் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
ஆகையால், இதன் மூலம் எந்தவொரு ரகசியத் தகவலும் கசியவோ அல்லது பெருமளவில் பதிவிறக்கப்படவோ இல்லை. இந்தச் சம்பவம் மதிப்பெண்கள், தரவரிசைகள் மற்றும் தேர்வர்களின் பிரிவுகள் உள்ளிட்ட தேர்வு முடிவுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.