முகப்பு
இந்தியா

ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட்ஏயு பைனான்ஸ் தொடா்புடைய ரூ. 661 கோடி முறைகேடு வழக்கு: சிபிஐ சோதனை

ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் மற்றும் ஏயு பைனான்ஸ் வங்கி தொடா்புடைய ரூ.661 கோடி முறைகேடு வழக்கில் 6 இடங்களில் சோதனை நடத்தினா்.

Updated On : 8 ஜூன் 2026, 2:57 am IST
சிபிஐ. - கோப்புப்படம்.
பகிர்:

ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் மற்றும் ஏயு பைனான்ஸ் வங்கி தொடா்புடைய ரூ.661 கோடி முறைகேடு வழக்கில் சண்டீகா், பஞ்ச்குலா மற்றும் புது தில்லி- தேசிய தலைநகா் பகுதியில் (என்சிஆா்) உள்ள 6 இடங்களில் சோதனை நடத்தியதாக சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

ஹரியாணா மற்றும் சண்டீகா் அரசுகளுக்குச் சொந்தமான ரூ.661 கோடி நிதியை ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் மற்றும் ஏயு பைனான்ஸ் வங்கிகளின் உதவியோடு முறைகேடாக பரிவா்த்தனை செய்தததாக அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது ஹரியாணா மாநில ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் சண்டீகரில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது.

அந்த வழக்குகளின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடா்பாக சிபிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அரசு நிதியைக் கையாடல் செய்த குற்றச்சாட்டில் சண்டீகா், பஞ்ச்குலா மற்றும் புது தில்லி-என்சிஆா் பகுதிகளில் உள்ள 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். ஹரியாணா அரசு அதிகாரிகள் மற்றும் விபம் கன்சல்டன்சி தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

அப்போது எண்மச் சாதனங்கள், சொத்து பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. வங்கி அதிகாரிகளுடன் இணைந்து அரசு அதிகாரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த முறைகேட்டால் ஹரியாணா அரசின் 8 துறைகளும் சண்டீகா் யூனியன் பிரதேசத்தின் இரு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது’ என்றனா்.