முகப்பு
இந்தியா

சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனை

உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகரிப்பதற்காக உட்கொள்ளப்படும் ஃபோலிக் அமில மருந்துகள் தற்போது மில்லி கிராம் (எம்ஜி) எனப்படும் அளவீட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இனி அவற்றை மைக்ரோ கிராமாக (எம்சிஜி) வகைப்படுத்தி சந்தைப்படுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 10 ஜூன் 2026, 3:50 am IST
பகிர்:

உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகரிப்பதற்காக உட்கொள்ளப்படும் ஃபோலிக் அமில மருந்துகள் தற்போது மில்லி கிராம் (எம்ஜி) எனப்படும் அளவீட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இனி அவற்றை மைக்ரோ கிராமாக (எம்சிஜி) வகைப்படுத்தி சந்தைப்படுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, இந்த புதிய நடைமுறை அடுத்த ஆறு மாதங்களில் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலில் ரத்த சிவப்பணுக்களை மேம்படுத்தவும், ஹோமோசிஸ்டைன் எனப்படும் அமினோ அமிலத்தின் அளவை குறைப்பதற்கும் பி 9 சத்துகள் தேவைப்படுகின்றன. அந்த அளவுகள் சீராக இல்லாதபட்சத்தில் மாரடைப்பு, பக்கவாதம், ரத்தசோகை உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.

Advertisement

Advertisement

அதனைத் தவிா்க்கும் பி 9 சத்துகளை உடலுக்கு வழங்குது ஃபோலிக் அமில மருந்துகள்தான். பேறு காலத்தில் சிசுவுக்கு பிறவிக் குறைபாடு ஏற்படாமல் தடுப்பதிலும் ஃபோலிக் அமிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்தருணங்களில் குறைந்த அளவில் அந்த மருந்தை மருத்துவா்கள் பரிந்துரைப்பா். அதேவேளையில், நரம்பு குழாய் குறைபாடு உள்பட பிற பாதிப்புகளுக்கு மருந்தின் அளவு அதிகரிக்கப்படும்.

மருந்தின் அளவீட்டு முறைகளால் ஏற்படும் குழப்பங்களையும், தவறான புரிதல்களையும் தவிா்க்க மில்லி கிராமுக்கு பதிலாக மைக்ரோ கிராம் அளவில் ஃபோலிக் அமில மருந்துகளை வகைப்படுத்தலாம் என மத்திய மருந்து ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம் மருந்தின் வீரியமானது தேவையின் அடிப்படையில் மிகக் குறைவான அளவிலிருந்தே வழங்க முடியும்.

இதுதொடா்பான அறிவிக்கை அரசிதழில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. பொது மக்கள், துறைசாா் நிபுணா்களிடம் இதுதொடா்பாக கருத்துகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் இனி ஃபோலிக் அமில மருந்துகளை மைக்ரோ கிராம் அளவில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு, இதை ஆறு மாதங்களில் அமலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.