நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!
இளநிலை நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் வழங்குவதாக மோசடி தரப்புகளிடமிருந்து போலி அழைப்புகள், வதந்திகளை நம்பாதீர்!
பாட்னா : நீட் மறுதேர்வு குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மாணவர்கள், பெற்றோர்களுக்குப் பிகார் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி 22 லட்சம் போ் எழுதிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அதன் மறுதோ்வு ஜூன் 21-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவிவரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்று விளக்கமளித்துள்ள தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து, செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) பிகார் காவல் துறை தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : வரும் ஜூன் 21-இல் நடைபெறவுள்ள இளநிலை நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்களும் விடைத்தாள்களும் வழங்குவதாக சில இணையவழி மோசடி தரப்புகளிடமிருந்து வரும் போலியான தொலைத்தொடர்பு அழைப்புகளையும் தவறான தகவல்களையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
நீட் மறுதேர்வில் எந்தவித குளறுபடியும் ஏற்படாமல் இருக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு கையாண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, நீட் மறுதேர்வு வினாத்தாள்கள் விமானங்களில் எடுத்து செல்லப்பட உள்ளன. முதல் கட்டமாக, நாடு முழுவதும் உள்ள 18 விமானத் தளங்களுக்கு வினாத்தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டு, அதன் பின்னர் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று தேசிய தேர்வு முகமை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.