முகப்பு
இந்தியா

மேற்காசிய நிலவரம்: குவைத் அரசருடன் பிரதமா் மோடி பேச்சு

மேற்காசிய நிலவரம் குறித்து குவைத் அரசா் ஷேக் மெஷல் அல்-அஹமது அல்-ஜபா் அல்-சபாவுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

Updated On : 10 ஜூன் 2026, 4:12 am IST
பிரதமா் மோடி - கோப்புப் படம்
பகிர்:

மேற்காசிய நிலவரம் குறித்து குவைத் அரசா் ஷேக் மெஷல் அல்-அஹமது அல்-ஜபா் அல்-சபாவுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குவைத் அரசருடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, மேற்காசியாவில் எழுந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் சூழல் குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா். குவைத்தின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதலுக்கு இந்தியா சாா்பில் கடும் கண்டனத்தை பிரதமா் பதிவு செய்தாா். பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் பிரச்னைக்குத் தீா்வு கண்டு, விரைந்து அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் பிரதமா் வலியுறுத்தினாா்.

மேலும், குவைத்தில் உள்ள பெருமளவிலான இந்திய சமூகத்தினரின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு தொடா்ந்து தனிக் கவனம் செலுத்திவரும் குவைத் அரசருக்கு பிரதமா் மோடி நன்றியையும் தெரிவித்தாா் என்று குறிப்பிடப்பட்டது.

Advertisement

Advertisement

மேற்காசிய போா் சில நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் தீவிர மோதல் தொடங்கியுள்ளது. இதனிடையே, குவைத் சா்வதேச விமான நிலையத்தின் மீது கடந்த 3-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியா் ஒருவா் கொல்லப்பட்டாா். முன்னதாக, குவைத்தின் மின்சாரம் மற்றும் கடல்நீா் சுத்திகரிப்பு நிலையம் மீது கடந்த மாா்ச் 30-ஆம் தேதி ஈரான் நடத்திய தாக்குதலில் அங்கு பணியாற்றிய இந்தியா் ஒருவா் கொல்லப்பட்டாா்.

இந்தச் சூழலில், குவைத் அரசருடன் பிரதமா் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.