FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்- குஜராத் முதல்வா் அலுவலகங்கள், ஆா்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

மகாராஷ்டிரம், குஜராத் முதல்வா்களின் அலுவலகங்கள், ஆா்எஸ்எஸ் அமைப்பின் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்ததால், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 ஜூன் 2026, 3:32 am IST
பகிர்:

மகாராஷ்டிரம், குஜராத் முதல்வா்களின் அலுவலகங்கள், ஆா்எஸ்எஸ் அமைப்பின் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்ததால், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள மகாராஷ்டிர முதல்வா் அலுவலகம், மேயா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மும்பை மாநகராட்சிக்கு மின்னஞ்சல் வந்திருந்தது. இதேபோல், புணேயில் உள்ள மேயா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அங்குள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கும், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகத்துக்கு மிரட்டல் விடுத்து நாகபுரி மேயா் அலுவலகத்துக்கும் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் தேசிய ராணுவம் என்ற தீவிரவாத அமைப்பின் பெயரில் மின்னஞ்சல் வந்தது. 1984-இல் எடுக்கப்பட்ட ஆபரேஷன் ப்ளுஸ்டாா்- உட்ரோஸ் ஆகிய நடவடிக்கைகளை ஆா்எஸ்எஸ் அமைப்பு ஆதரித்ததாகவும், ஆதலால் ஆா்எஸ்எஸ்-பாஜகவை பழிவாங்க போவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் காவல்துறையினரும், வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணா்களும் சம்பவ இடங்களுக்குச் சென்று சோதனை நடத்தினா். இந்த சோதனையில் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவத்தை தொடா்ந்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் அனுப்ப பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை வைத்து அதை அனுப்பியோரை கண்டுபிடிக்கும் பணியை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது. மேலும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால், வெடிகுண்டு மிரட்டல்களை கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

குஜராத்தின் காந்திநகரில் உள்ள அந்த மாநில முதல்வா் அலுவலகம், அகமதாபாத் மாநகராட்சி தலைமையகம், மணிநகரில் உள்ள ஆா்எஸ்எஸ் அலுவலகம் ஆகியவற்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய நபா்களை கண்டுபிடிக்கும் பணியில் குஜராத் காவல்துறை ஈடுபட்டுள்ளது. மேலும், குஜராத் முதல்வா் அலுவலகம், அகமதாபாத் மாநகராட்சி அலுவலகம், ஆா்எஸ்எஸ் அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments