புணேவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம்! அபிஜித் திப்கே, சோனம் வாங்சுக் பங்கேற்பு!
புணேவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டம் நடத்தியுள்ளது குறித்து...
மகாராஷ்டிரத்தின் புணேவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இளைஞர்களை கரப்பான்பூச்சி என விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அபிஜித் திப்கே என்பவர் தொடங்கிய கரப்பான்பூச்சி மக்கள் கட்சி எனும் சமூக வளைதளப் பக்கம் மாபெரும் இயக்கமாக உருவாகியுள்ளது.
இந்த இயக்கத்தின் தலைவர் அபிஜித் திப்கே தலைமையில், கடந்த ஜூன் 6 அன்று தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற போராட்டத்தில் நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் நடைபெறும் முறைக்கேடுகளைக் கண்டித்து புணேவில் உள்ள சாவித்ரிபாய் பூலே புணே பல்கலைக்கழகத்தில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் இன்று (ஜூன் 11) போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், அபிஜித் திப்கே மற்றும் லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆகியோர் கலந்துகொண்டு தலைமை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி மற்றும் கல்வியில் நடைபெறும் முறைக்கேடுகளை எதிர்த்து பெங்களூரு, ஜெய்ப்பூர், லக்னௌ, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினரின் போராட்டம் தொடரும் என அபிஜித் திப்கே அறிவித்துள்ளார்.