ஜூன் 14-ல் பெங்களூரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம்!
பெங்களூரில் வரும் ஜூன் 14 ஆம் தேதி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் அறிவிப்பு...
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் வரும் ஜூன் 14 ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அபிஜித் திப்கே தொடங்கிய சமூக ஊடகப் பக்கம், இளைஞர்களின் ஆதரவைப் பெற்று பெரும் இயக்கமாக உருவாகியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தில்லி, புணே மற்றும் லக்னௌ உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் நடைபெறும் முறைக்கேடுகளைக் கண்டித்து வரும் ஜூன் 14 ஆம் தேதி மாலை 4 மணியளவில் பெங்களூரின் ஃபிரீடம் பார்க் பகுதியில் போராட்டம் நடத்தவுள்ளதாக, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரையில் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் தங்களின் போராட்டம் தொடரும் என கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கூறியிருந்தனர்.
மேலும், இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஏராளமான பிரபலங்களும் ஆதரவளித்திருந்த நிலையில், தில்லி, புணே போராட்டங்களில் லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் நேரில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.