தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்?
தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாகவும், தீர்மானத்திற்கான அறிவிப்பு வரைவு இறுதி செய்யப்பட்டு இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி. ஒருவர் இந்த வரைவைத் தயார் செய்வதில் ஈடுபட்டிருப்பதாகவும், இது எதிர்க்கட்சிகளின் கூட்டு முயற்சி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீர்மானம் பதவியில் இருக்கும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் முதல் தீர்மானமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாகப் பேசிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், “தீர்மானத்திற்கான வரைவை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இரு அவைகளிலும் இதனைக் கொண்டு வர முடிவெடுத்துள்ளோம். ஒத்த கருத்துள்ளக் கட்சிகள் இணைந்து இதனை முன்னெடுக்கிறோம்” என்றார்.
இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் என்றும் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் இதில் பங்கெடுப்பார்கள் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் பணிகளைத் தொடங்கவுள்ளனர். நாடாளுமன்ற விதிகளின்படி, இதுபோன்ற தீர்மானத்தை முன்மொழிய மக்களவையில் 100 எம்.பி. க்கள் அல்லது மாநிலங்களவையில் 50 எம்.பி.க்கள் கையெழுத்திடவேண்டும்.
சட்டப்படி தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்குவதற்கான வழிமுறை உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நீக்குவதற்குச் சமமானது.
சமீபத்தில் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்குவதற்கானத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து முன்மொழிய திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி ஆதரவு தெரிவித்திருந்தார்.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பலரது பெயர் நீக்கப்பட்டது தொடர்பாக அவர் தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
Opposition parties are planning to bring a resolution to remove the Chief Election Commissioner from office.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.