பவன் கல்யாண் கட்சி எம்எல்ஏவிடம் ரூ. 12 லட்சம் சைபர் மோசடி: கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியால் விபரீதம்!
பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி வழியே வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 12 லட்சம் பறிபோனது
ஜனசேனை கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரின் கைப்பேசியிலிருந்து ஆண்ட்ராய்டு செயலி வழியாக ரூ. 12 லட்சம் சைபர் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனை கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சி. பாலராஜுவின் கைப்பேசிக்கு கடந்த மார்ச் 6-ஆம் தேதி ஒரு இணையதள முகவரியுடன் ஆண்ட்ராய்டு செயலி பதிவிறக்கம் செய்ய கோப்பு ஒன்று வந்ததாகக் கூறப்படுகிறது. அதில், அனுப்புநர் முகவரியாக ‘சாலைப் போக்குவரத்து ஆணையரகம் (ஆர்டிஏ)’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததாம். அந்த லிங்க்-ஐ அவர் தொட்டு அதன் வழியாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு செயலி ஒன்றின் வழியே அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ. 12 லட்சம் பணப்பரிவர்த்தனை செய்ப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் தேசிய சைபர் க்ரைம் உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளித்தார்.அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்துள்ள இணையதள குற்றச்செயல் தடுப்புப்பிரிவு காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தக் குற்றச்செயலில் சர்வதேச மோசடி கும்பலுக்கு தொடர்பிருப்பதாகவும் அவர்கள் திட்டமிட்டு இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.