பஹல்காமில் வெளிநாட்டுப் பயணிகளின் தகவல்களை வழங்காத ஹோட்டல் மீது வழக்குப்பதிவு!
23 வெளிநாட்டுப் பயணிகளின் தகவல்களை வழங்காத ஹோட்டல் மீது வழக்குப்பதிவு...
ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டவர் 23 பேரின் தகவல்களை வழங்காத பஹல்காம் ஹோட்டல் மீது ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
ஹோட்டல்களில் வெளிநாட்டவர் தங்கும்போது அதற்குரிய ஃபார்ம் - சி எனப்படும் ஆன்லைன் படிவத்தை ஹோட்டல் நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும். இதனை, காவல்துறையினர் வழக்கமாக சோதனை செய்வார்கள்.
இந்த நிலையில், ஜம்மு- காஷ்மீடின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் உள்ள தேவாதூ பகுதியில் காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அதில், ஹோட்டல் மிஸ்டி மவுண்டைன்ஸ் எனும் ஹோட்டலில் பிரிட்டனைச் சேர்ந்த 19 பேர் உள்பட 23 வெளிநாட்டினர் மார்ச் 22 வரை தங்கியிருந்தனர். ஆனால், அதுபற்றி காவல்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆன்லைன் படிவங்களை ஹோட்டல் நிர்வாகம் சமர்ப்பிக்கவில்லை.
இது வெளிநாட்டினர் மற்றும் குடியேறுதல் சட்டம் 2025 - ஐ மீறுவதாகவும், பாதுகாப்பு நெறிமுறைகளைச் சீர்குலைப்பதாகவும் குறிப்பிட்டு ஹோட்டல் நிர்வாகம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், ஹோட்டல்களில் தங்கும் வெளிநாட்டவர்கள் குறித்த தகவல்களை சரிவர வழங்கவேண்டும் என்றும், மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தப் பகுதி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.