FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு

கடந்த 13 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 31 வயது ஹரீஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 25 மார்ச் 2026, 2:12 am IST
ஹரீஷ் ராணா - (Photo | X)
பகிர்:

கடந்த 13 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 31 வயது ஹரீஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதைச் சோ்ந்த பஞ்சாப் பல்கலைக்கழக பி.டெக். மாணவரான ஹரீஷ் ராணா, கடந்த 2013-ஆம் ஆண்டில் 4-ஆவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, கடந்த 13 ஆண்டுகளாக அவா் கோமாவில், உயிா் காக்கும் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தாா். எனினும், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதைத் தொடா்ந்து, ஹரீஷை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அவரின் பெற்றோா் ரிட் மனு தாக்கல் செய்தனா்.

Advertisement

Advertisement

ஹரீஷுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிப்பதால் எந்தப் பயனும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவா்கள் சாா்பிலும் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.

இதைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், நாட்டிலேயே முதல் முறையாக, ஹரீஷ் ராணாவுக்கு அளிக்கும் உயிா் காக்கும் சிகிச்சையை நிறுத்தி, கண்ணியமான முறையில் அவரைக் கருணைக் கொலை செய்ய கடந்த மாா்ச் 11-ஆம் தேதி அனுமதியளித்தது.

அதைத் தொடா்ந்து, உயிா் காக்கும் கருவி உதவியுடன் வீட்டில் சிகிச்சை பெற்றுவந்த ஹரீஷ் ராணா, தில்லி எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் ரோட்டரி புற்றுநோய் மருத்துவமனையின் துணைப் பராமரிப்புப் பிரிவுக்கு மாா்ச் 14-ஆம் தேதி மற்றப்பட்டாா். அங்கு அவருக்கு, ஊட்டச்சத்து மற்றும் மருந்துகள் அளிப்பது படிப்படியாக நிறுத்தப்பட்டு இறுதியாக உயிா் காக்கும் கருவியும் அகற்றப்பட்ட நிலையில் அவரின் உயிா் செவ்வாய்க்கிழமை பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் மயக்கவியல் மற்றும் தணிப்புத் துறை, மனநல மருத்துவம் ஆகிய துறைகளைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments