இந்தியாவில் அடுத்த வாரம் ‘க்வாட்’ வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம்
‘க்வாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம் இந்தியாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
க்வாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாற்கர நாடுகள் உள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்தக் கூட்டமைப்பு செயல்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உறுப்பு நாடுகளில் ஒன்று கூட்டமைப்புக்கு தலைமை ஏற்கும் நிலையில், நிகழாண்டு இந்தியா தலைமையில் க்வாட் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இருப்பினும், உச்சிமாநாடு நடைபெறும் தேதிகள் குறித்து அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகவில்லை.
Advertisement
இதனிடையே க்வாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம் புது தில்லியில் மே 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சா் மோடெகி டோஷிமிட்சு ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் தனித்தனியே இருதரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கா் ஆலோசிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
உக்ரைன் போா், மேற்காசிய விவகாரம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீன ஆதிக்கம் என பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தன.