கரப்பான்பூச்சி கட்சியின் எக்ஸ் பக்கம் மீதான தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் மீதான தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுத்தது குறித்து...
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் மீதான தடையை நீக்க தற்போதைய நிலையில் மறுப்பதாக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்தால் கோபமடைந்த இளைஞர்கள், அந்த வார்த்தையையே தங்களின் அடையாளமாக மாற்றி, கடந்த மே 16 ஆம் தேதி அபிஜித் திப்கே என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தலைமையில் 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி' (சிஜேபி) என்ற நையாண்டி பக்கத்தை முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் தொடங்கினர்.
தொடங்கிய சில நாள்களிலேயே, அதன் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. இதனையடுத்து, கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது.
Advertisement
Advertisement
முடக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது என்ற அடைமொழியுடன் ‘காக்ரோச் இஸ் பேக்’ பெயரில் புதியதொரு எக்ஸ் கணக்கு தொடங்கப்பட்டது.
இருப்பினும், அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம் மீதான தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அபிஜித் திப்கே மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை இன்று, விசாரித்த நீதிபதி புருஷைந்திர குமார் கௌரவ், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே காணொளி வாயிலாக ஆஜராகவ அனுமதி அளித்தார்.
விசாரணை முடிந்த பிறகு, நையாண்டி டிஜிட்டல் அமைப்பான கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் மீதான தடையை நீக்க தற்போதைய நிலையில் மறுப்பதாகவும், தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் ஒரு மறுஆய்வுக் குழுவை அமைப்பதாகவும், இவ்விவகாரத்தை ஆராய்ந்து, வரும் ஜூலை 7ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
மேலும், இந்தக் குழுவின் ஆய்வு அறிக்கைக்குப் பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.