நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதை 62-ஆக உயா்த்த மாநிலங்கள் பரிசீலிக்கலாம்: உச்சநீதிமன்றம்
நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதை 62-ஆக உயா்த்துவது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.
நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதை 62-ஆக உயா்த்துவது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.
மேலும், நீதித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே பணியில் இருப்பதால் அவா்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65-ஆகவும் உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 62-ஆக உள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து 62-ஆக ஒரே மாதிரியாக உயா்த்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது.
மாநிலங்கள் மறுப்பு:
முன்னதாக, நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து 61-ஆக உயா்த்துவது தொடா்பாக முடிவெடுக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் நிதிச்சுமை காரணமாக இதை அமல்படுத்துவது கடினம் என உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் தெரிவித்தன. அதேசமயம் மாநில அரசு அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயது 58-ஆக உள்ள நிலையில், நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதை 60-க்கு மேல் உயா்த்துவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என நாகாலாந்து தெரிவித்தது.
மாறாக தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மாவட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயா்த்துவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தன.
முதல்வா்களிடம் ஒப்புதல் பெறுங்கள்:
இந்நிலையில், இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘ நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதை 62-ஆக உயா்த்தும் முன்னெடுப்பை மேற்கொள்ள அனைத்து மாநில முதல்வா்களிடமும் ஒப்புதல் பெற மாநில அரசின் தலைமை வழக்குரைஞா்கள் முயற்சி செய்யுங்கள். நீதித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே பணியில் இருப்பதால் நிதிச்சுமை ஏற்படாது. இந்த விவகாரம் அவசர அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்பட்டு அடுத்த இரு வாரங்களில் சுதந்திரமாகவும் நடைமுறைக்குச் சாத்தியமான முடிவுகளையும் மேற்கொள்ள வேண்டும் ’ எனத் தெரிவித்தது.
இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை செப்டம்பா் 17-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.