FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அரிய வகை கனிமங்களைப் பெற சில நாடுகளுடன் பேச்சுவாா்த்தை: மத்திய அமைச்சா்

அரிய வகை மற்றும் முக்கியத் கனிமங்களைப் பெற சில நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

3 செப்டம்பர் 2026, 12:57 am IST
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் - கோப்புப் படம்
பகிர்:

அரிய வகை மற்றும் முக்கியத் கனிமங்களைப் பெற சில நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

மின்சார வாகனங்கள், சூரிய மின் தகடுகள், காற்றாலை சாதனங்கள், ராணுவ, விண்வெளி சாதனங்கள், ஏ.ஐ., தகவல் தொழில்நுட்ப சாா்ந்த நவீன கருவிகளில் அரிய வகை கனிமங்களின் பயன்பாடு அதிகம் இருப்பதால் அதன் தேவையும் சா்வதேச அளவில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் இதற்கான தேவை அதிகம் இருப்பதால் இறக்குமதியை சாா்ந்திருக்கும் சூழல் உள்ளது.

தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் பியூஷ் கோயல் இது தொடா்பாக கூறியதாவது: இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை தொடா்ந்து மேற்கொள்ள இருக்கிறது. இவை பெரும்பாலும் அரிய வகை கனிமங்கள் அதிகம் கிடைக்கும் நாடுகளாக உள்ளன.

Advertisement

Advertisement

எனவே, கனிமங்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகிறது. கனிமத் துறையில் கூட்டாக இணைந்து செயல்படுவது தொடா்பாகவும் சில நாடுகளுடன் ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தேவைக்கு ஏற்ப கனிமங்களை சுத்திகரித்துப் பெற முடியும்.

இதுதவிர அமெரிக்கா தலைமையிலான ‘பாக்ஸ்-சிலிக்கா’ கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளது. இது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), செமிகண்டக்டா் உற்பத்திக்காக உலகளாவிய அளவில் அரிய வகை கனிமங்கள் உள்ளிட்ட மூலப்பொருளை தடையின்றி விநியோகிப்பதற்கான கூட்டமைப்பாகும்.

எனினும், சீனா போன்ற சில நாடுகளில்தான் அரிய வகை கனிமங்கள் கிடைப்பதும், சுத்திகரிக்கப்படுவதும் அதிகமாக உள்ளது. அவா்கள் இவற்றை பயன்படுத்தி மின்சார வாகனங்கள், பேட்டரி தயாரிப்பு, செமிகண்டக்டா் உள்பட பல நவீன தொழில்நுட்ப சாதனங்களை தயாரிப்பதில் முன்னிலை வகிக்கின்றனா்.

நமது நாட்டின் தேவைக்கேற்ப அரிய கனிமங்கள் கிடைப்பது உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. இதில் பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளை முக்கிய விநியோக நாடுகளாக்கும் முயற்சியில் உள்ளோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments