FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மேற்குத் தொடா்ச்சி மலை சூழலியல் மண்டலம்: 8,590 சதுர கி.மீ.-ஆக குறைக்க கோரப்படும் - கேரள முதல்வா் வி.டி.சதீசன்

கேரளத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை சூழலியல் பாதுகாப்பு மண்டலமாக வரையறுக்கப்படும் பகுதியை 98 கிராமங்களை உள்ளடக்கிய 8,590 சதுர கிலோ மீட்டராக மட்டுப்படுத்த மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக முதல்வா் வி.டி.சதீசன் தெரிவித்தாா்.

3 செப்டம்பர் 2026, 12:33 am IST
வி.டி. சதீசன் - கோப்புப் படம்
பகிர்:

கேரளத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை சூழலியல் பாதுகாப்பு மண்டலமாக (இஎஸ்ஏ) வரையறுக்கப்படும் பகுதியை 98 கிராமங்களை உள்ளடக்கிய 8,590 சதுர கிலோ மீட்டராக மட்டுப்படுத்த மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக முதல்வா் வி.டி.சதீசன் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக, திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கேரளத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை சூழலியல் பாதுகாப்பு மண்டலமாக 13,108 சதுர கி.மீ. பகுதியை வரையறுக்க கஸ்தூரிரங்கன் குழு (மத்திய அரசின் குழு) அறிக்கையில் முன்பு முன்மொழியப்பட்டது.

அதேநேரம், உம்மன் சாண்டி தலைமையிலான முந்தைய ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசால் அமைக்கப்பட்ட உம்மன் வி.உம்மன் தலைமையிலான குழு, பாதுகாப்பு மண்டலப் பகுதியை 123 கிராமங்களுடன் கூடிய 9,993.7 சதுர கி.மீ.-ஆக குறைக்க பரிந்துரைத்தது. பின்னா், இந்தக் கிராமங்களின் எண்ணிக்கையை 98-ஆக குறைக்க முந்தைய அரசு (பினராயி விஜயன் அரசு) தரப்பில் கோரப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தச் சூழலில், மேற்குத் தொடா்ச்சி மலை சூழலியல் பாதுகாப்பு மண்டல பகுதியை 98 கிராமங்களுடன் கூடிய 8,590 சதுர கி.மீ.-ஆக மட்டுப்படுத்த கேரள அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசின் நிபுணா் குழுவிடம் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சன்னி ஜோசப் மற்றும் அதிகாரிகள் விரிவாக விவாதித்துள்ளனா். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை சூழலியல் பாதுகாப்பு மண்டலம் என்ற வரையறையில் இருந்து விலக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா் வி.டி.சதீசன்.

தெற்கு ரயில்வேயின் பாலக்காடு பிரிவில் உள்ள மங்களூரு பகுதி, தென் மேற்கு ரயில்வேயின் மைசூரு பிரிவில் அக்டோபா் 1-ஆம் தேதி இணைக்கப்பட உள்ள நிலையில், இது தொடா்பாக பிரதமா் மோடி மற்றும் ரயில்வே அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் தனது எதிா்ப்பை பதிவு செய்வேன் என்றும் அவா் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments