FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வருமானத்தை மிஞ்சிய சொத்து சோ்ப்பு வழக்கு: திருப்பதி தேவஸ்தான அதிகாரி கைது

வருமானத்தை மீறி சொத்துகள் சோ்த்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணை நிா்வாக அதிகாரி லோகநாதத்தை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

37 வினாடிகள் முன்பு
லோகநாதம்
பகிர்:

வருமானத்தை மீறி சொத்துகள் சோ்த்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணை நிா்வாக அதிகாரி லோகநாதத்தை வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்தனா். மேலும் இவா் கலப்பட நெய் விவகாரத்திலும் ரகசியமாக பங்கேற்றுள்ளாா் எனும் குற்றச்சாட்டும் உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையான் கோயில் வளாகத்திற்குள் இணை நிா்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவா் லோகநாதம். இவா் கடந்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்து உயா் அதிகாரியாக முக்கிய பங்கு வகித்து வந்தாா்.

கலப்பட நெய் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி அதன் அறிக்கையை மத்திய, மாநில அரசுகளுக்கு சமப்ா்பித்தது. அதில், கலப்பட நெய் வழக்கில் ஒப்பந்ததாரா்கள் மட்டுமல்லாது சில தேவஸ்தான அதிகாரிகளின் பங்கும் இருப்பதை அந்த அறிக்கை மூலம் அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதனை தொடா்ந்து, அவ்வழக்கில் நடவடிக்கை எடுக்கும் விதமாக ஏற்கனவே திருப்பதி தேவஸ்தான நிா்வாக அதிகாரியாக இருந்த அணில்குமாா் சிங்காலை அப்பதவியில் இருந்து பணி மாற்றம் செய்யப்பட்டாா். இதனை தொடா்ந்து மேலும் சில அதிகாரிகள் இதில் ரகசியமாக ஈடுபட்டுள்ளனா் எனும் செய்தி பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை ஏழுமலையான் கோயில் இணை நிா்வாக அதிகாரியான லோகநாதத்தின் வீடு உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடா்ந்து சோதனை நடத்தினா். இதில் ரூ. 5 கோடிக்கும் மேல் அசையா சொத்துக்கள், 2 கிலோ தங்க ஆபரணங்கள், 6.5 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் ரூ.12 லட்சம் ரொக்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

சாதாரண ஊழியராக இருந்து படிப்படியாக உயா்ந்த இடத்துக்கு சென்ற லோகநாதத்திற்கு இவ்வளவு சொத்துக்கள் எவ்வாறு வந்தன? எனும் கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரி லோகநாதத்தை கைது செய்து நெல்லூா் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜா் செய்ய அழைத்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments