உலகளாவிய இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு: இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் ராகவ் சத்தா!
சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உலகளாவிய மாநாட்டில் இந்தியா சார்பாக ராகவ் சத்தா எம்பி கலந்துகொள்கிறார்.
சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உலகளாவிய மாநாட்டில் இந்தியா சார்பாக ராகவ் சத்தா எம்பி கலந்துகொள்கிறார்.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கந்த் நகரில் 12-வது சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உலகளாவிய மாநாடு செப் 4 முதல் 6 வரை நடைபெறுகிறது.
இதில், இந்தியா சார்பாக ராகவ் சத்தா எம்பி கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டில் கலந்துகொண்டு இந்திய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த ராகவ் சத்தாவை இந்திய துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான சிபி ராதாகிருஷ்ணன் பரிந்துரைத்தார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக, மாநிலங்களவை எம்பி ராகவ் சத்தா தனது எக்ஸ் தளப் பதிவில், “இன்டர்-பார்லிமென்டரி யூனியன்' அமைப்பின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 12-வது உலகளாவிய மாநாட்டில் இந்திய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். இந்தக் குழுவில் என்னை நியமித்த துணைக் குடியரசுத் தலைவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்ட இன்டர்-பார்லிமென்டரி யூனியன் அமைப்பு 1889-ல் நிறுவப்பட்டது. இது உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய தேசிய நாடாளுமன்றங்களின் அமைப்பாகும். இது, 180 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்களையும் 15 இணை உறுப்பினர்களையும் ஒன்றிணைக்கிறது. இந்த ஆண்டிற்கான மாநாட்டின் கருப்பொருள் ’நெருக்கடி காலங்களில் மனித உரிமைகள், நீதி மற்றும் கண்ணியத்தை மீட்டெடுத்தல்’ என்பது.
மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில், உலகம் முழுவதுமிருந்து இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வர். இதில், நெருக்கடியான சூழல்களில் இளைஞர்களின் உரிமைகள், டிஜிட்டல் உரிமைகள் மற்றும் இணையப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் மற்றும் நீதி, இளைஞர்களுக்கான பொருளாதார வாய்ப்புகள் போன்றவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக, நமது நாடாளுமன்றம் புதிதாக பல விஷயங்களை பகிரவும், கற்றுக்கொள்ளவும் வேண்டியுள்ளது. நமது பிரதமர் மோடி சமீபத்தில் தனது உஸ்பெகிஸ்தான் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த நேரத்தில், இருநாட்டு உறவில் நாடாளுமன்றம் சார்பாக அந்த உத்வேகத்தை முன்னெடுத்துச் செல்வதில் சிறிய பங்கு வகிப்பது பெருமையாக உள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
MP Raghav Chadha is participating in the Inter-Parliamentary Union's Global Conference of Young Parliamentarians on behalf of India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.