வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நியாயமற்றது: முன்னாள் தேர்தல் ஆணையர் விமர்சனம்!
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் என்பது லட்சக்கணக்கான மக்களின் மீது திணிக்கப்படும் நியாயமற்ற நடவடிக்கை என முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா விமர்சித்துள்ளார்.
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் என்பது லட்சக்கணக்கான மக்களின் மீது திணிக்கப்படும் நியாயமற்ற நடவடிக்கை என முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா விமர்சித்துள்ளார்.
முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடந்த 2024 ஆம் ஆண்டு அப்பதவியில் இருந்து ராஜிநாமா செய்தார். இவர், ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஏற்பாடு செய்த 'ஜக்தீப் சிங் சோக்கர் நினைவுச் சொற்பொழிவு' நிகழ்ச்சியில் பேசினார்.
அதில், “வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு நீதித்துறை ஒப்புதல் அளித்து, இதனைச் சட்டப்பூர்வமானது என அரசு கூறியுள்ளது. நிச்சயமாக இது சட்டப்பூர்வமானதே. ஆனால், இது நியாயமானதா? அதுதான் இப்போதைய கேள்வி. அதில்தான், நீதி அடங்கியுள்ளது” என விமர்சித்துப் பேசியுள்ளார்.
Advertisement
Advertisement
மேலும் பேசுகையில், “சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டதால் மட்டுமே தாங்கள் செய்வது அனைத்தும் சரி என்ற அடிப்படையில் அரசு மற்றும் அரசியலமைப்பு அமைப்புகள் செயல்படுவதாகத் தோன்றுகின்றது.
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் லட்சக்கணக்கான மக்கள் மீது திணிக்கப்பட்ட நியாயமற்ற நடைமுறை. சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்புள்ள அமைப்புகள், அந்தச் சட்டங்களின் நோக்கங்களையும் நிலைநிறுத்த வேண்டும்.
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்தின் கீழ் செய்யப்படும் அனைத்தும் சட்டப்பூர்வமானவை என்று அதிகாரிகள் சொல்லலாம். ஆனால், அது நியாயமானது அல்ல.
வாக்காளர் பட்டியலில் 13 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில், என்ன நியாயம் இருக்கிறது. இதன்மூலம், வாக்காளர்கள் ஜனநாயகச் செயல்பாட்டிலிருந்து விலகாதவாறு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
ஏற்கனவே, 33 சதவீத மக்கள் வாக்களிப்பதில்லை. இந்த நிலையில், இதுபோன்ற மாற்றங்களால் குடிமக்களுக்கு ஜனநாயகச் செயல்பாட்டின் மீது ஈடுபாடு குறையும்” என்று அவர் தெரிவித்தார்.
பிகாரில் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டபோது வங்கதேசம், நேபாளம், மியான்மர் நாடுகளைச் சேர்ந்த பலரை களப்பணியாளர்கள் கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், வாக்காளர் பட்டியலில் இடம்பெறத் தகுதியற்ற நபர்களான அவர்களுடைய எண்ணிக்கை அல்லது ஆதாரம் பற்றி தேர்தல் ஆணையம் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.
வாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக இல்லாத வாக்காளர்களைக் குறிவைத்து சிறப்புத் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுவதாக, எதிர்க்கட்சிகள் முன்னரே விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
Former Election Commissioner Ashok Lavasa has criticized the special intensive revision of the electoral roll as an unfair measure imposed on lakhs of people.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.