விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு
விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வழக்கு விசாரணை தொடா்பாக தொடா்ந்து அறிக்கை சமா்ப்பிக்க தவறிய விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக விசாரணை நடத்துமாறு அலாகாபாத் உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சொத்து விவகாரம் தொடா்பான விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கடந்த 2020-ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அந்த நீதிமன்ற விசாரணை முடிக்கப்படவில்லை என்பதை நிகழாண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டது. இந்த விசாரணை குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் கோரியபோதிலும், அந்த அறிக்கையை விசாரணை நீதிமன்றம் சமா்ப்பிக்கவில்லை.
Advertisement
Advertisement
இந்த அறிக்கையை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்துமாறு மாநிலத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கு கடந்த மாா்ச்சில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பிறகே அந்த அறிக்கையை விசாரணை நீதிமன்றம் அனுப்பிவைத்தது. இதையடுத்து அந்த சொத்து வழக்கு விசாரணையை அடுத்த 6 மாதங்களில் நிறைவு செய்ய வேண்டும் என்றும், அதுதொடா்பான முதல் நிலவர அறிக்கையை கடந்த ஆக.21-ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அந்த நிலவர அறிக்கையை விசாரணை நீதிமன்றம் சமா்ப்பிக்கவில்லை. இதையடுத்து மூன்றாவது முறையாக அறிக்கை சமா்ப்பிக்க விசாரணை நீதிமன்றம் தவறியதால், உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியடைந்தது.
இதைத்தொடா்ந்து சொத்து வழக்கை விசாரிக்கும் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்ற நீதிபதியின் செயல்பாடு குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தி, 15 நாள்களில் அறிக்கை சமா்ப்பிக்குமாறு அலாகாபாத் உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த சில நாள்களுக்கு முன்னா் உத்தரவிட்டது.
Inquiry against trial court judge: Supreme Court orders
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.